வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 8 வயது சிறுவன் கனகராயன்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் சிறுவனின் தாயாரின் சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தயாரிடமும் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த திரிபரஞ்சன் தமிழவன் என்ற 8 வயது சிறுவன் ஒருவர் புதன்கிழமை 5 மணியளவில் காணாமல் போயுள்ளார். தனது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் உள்ள தனது அப்பப்பா வீட்டிற்கு தோட்டத்தினுடாக சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்ததாகவும், நேற்று முன்தினம் கனகராயன்குளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறுவனின் தந்தை வெளிநாடு செல்ல காரணமான ஏஜென்சி கடத்தி வைத்திருப்பதாகவும் 35 இலட்சம் தந்தால் சிறுவனை விடுவிப்பதாகவும் தாயின் தொலைபேசிக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் தொலைபேசி அழைப்பு வந்திருந்ததுடன் கடத்தப்பட்ட சிறுவனும் தொலைபேசியில் பேசியுள்ளார். குறித்த தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக் கொண்ட கனகராயன்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதனடிப்படையில் வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த சிறுவனைப் பொலிசார் மீட்டுள்ளதுடன் குறித்த சிறுவனை கடத்தி வைத்திருந்ததாக சிறுவனின் தாயாரின் சகோதரர் மற்றும் சித்தப்பா ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் இக் கடத்தல் நாடகத்தின் பின்னணியில் தாயாரும் இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா விசேட நிருபர்
from tkn