தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை உருவாக்கி பொலிஸார் சுயாதீனமாக செயற்படுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளதால் போதைப் பொருள் வர்த்தக சுற்றிவளைப்புக்கு எதிரான அரசியல் அழுத்தம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதன் பிரதிபலன்களை இலங்கைக்குள்ளும் வெளியிலும் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் இதற்கிணங்க பொலிஸ் விசேட செயலணி மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இணைந்து மீண்டும் பாரியளவு போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிகரமான சுற்றிவளைப்பில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அரநாயக்கவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், பொலிஸ் விசேட செயலணியும் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவும் மீண்டும் ஒருமுறை நாட்டில் பாரிய போதைப்பொருள் தொகையைக் கைப்பற்றியுள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டத்தில் இது முக்கிய நடவடிக்கையாக காணப்படுகின்றது. போதைப் பொருள் வர்த்தகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசியல் அழுத்தம் இல்லாதொழிக்கப்பட்டதாலேயே இத்தகைய வெற்றிகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை நாமே ஆரம்பித்தோம். போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிப்பதற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீடுகள் இதன்மூலம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. இதன் பிரதிபலன்களை இலங்கைக்குள்ளும் வெளியிலும் தற்போது காண முடிகின்றது. நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே நாம் இதுபோன்ற சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
(ஸ)
from tkn