ஒன்றரை ஆண்டுகளாக வெற்றிடம்
மேல் மாகாண ஆளுநருக்கு பெற்றோர் கடிதம்
கொழும்பு மாவட்டத்திலுள்ள ஹோமாகம கல்வி வலயத்தில் எட்டுத் தமிழ் பாடசாலைகள் உள்ளபோதிலும் ஹோமாகம கல்வி வலயத்திற்கென தமிழ் கல்விப்பணிப்பாளரொருவர் இதுவரை நியமிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னைய காலங்களில் ஹோமாகம கல்வி வலய காரியாலயத்தில் பெண்ணொருவர் தமிழ்ப் பிரிவு அதிகாரியாகக் கடமையாற்றினார். அவர் மாற்றம் பெற்று சென்றதன் பின்பு ஹோமாகம கல்வி வலய அலுவலகத்தில் ஒன்றரை வருடங்கள் கடந்த பின்பும் இதுவரை தமிழ் பிரிவுக்கென ஒருவர் நியமிக்கப்படவில்லை.
மேல் மாகாண கல்வி அமைச்சிடம் பலமுறை தொடர்பு கொண்டபோது, ஹோமாகம கல்வி வலயத்தில் குறைந்த எண்ணிக்கையிலான தமிழ் பாடசாலைகளே உள்ளதனால், தமிழ் கல்விப் பணிப்பாளர் ஒருவரை நியமிப்பது சாத்தியம் அற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.
எனவே, கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய கல்வி வலயங்களில் ஏதாவது ஒன்றுடனோ அல்லது இரண்டுடனோ ஹோமாகம கல்வி வலயத்தையும் இணைத்துப் பொதுவாக ஒருவரை கல்விப் பணிப்பாளராக நியமிப்பின் அவர் மூலமாக தேவைகளை நிறைவேற்ற முடியுமென சம்பந்தப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
மேற்படி விடயம் தொடர்பில் புதிதாக மேல் மாகாண ஆளுநராக நியமனம் பெற்றுள்ள சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஆளுநர் அசாத் சாலியிடம் ஹோமாகம கல்வி வலயத்திலுள்ள எட்டுத் தமிழ் பாடசாலைகளின் பெற்றோர்கள் இக்கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
(அவிசாவளை குறூப் நிருபர்)
from tkn