ஸ்ரீ லங்கன் விமான சேவை மறுசீரமைப்பு; ஜனாதிபதியினால் விசேட குழு நியமனம்

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் நிலவும் பிரச்சினைகளை சீர்செய்து அதனை மறுசீரமைப்பதற்கான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்று பரிந்துரைகளை முன்வைப்பதற்கான குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கலாநிதி நந்தலால் வீரசிங்க, கலாநிதி தர்மரத்ன ஹேரத், பேராசிரியர் டி.பி.பீ.எச்.திசா பண்டார, வீ.கனகசபாபதி, எல்.எஸ்.ஐ.ஜயரத்ன, விராஜ் தயாரத்ன, மஹேன் கோபல்லவ, வசந்த குமாரசிறி, அஜித் அமரசேகர, திசுரி வன்னியாரச்சி ஆகியோர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

இலங்கை விமான சேவையின் செயற்பாடு தொடர்பில் கடந்த 04 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கமைய இந்த குழுவினை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவையை முன்னேற்றுவதற்கான முன்மொழிவுகள், கருத்துக்கள் ஆகியவற்றை இக்குழுவிடம் சமர்ப்பிக்கும் சந்தர்ப்பம் அனைத்து தரப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் இக்குழுவின் பரிந்துரைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

அந்தப் பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்பான எதிர்கால தீர்மானங்கள் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படவுள்ளன.

நேற்று (07) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கியதன் பின்னர் குழு உறுப்பினர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

 

 

Tue, 01/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை