கல்விகற்கும் மாணவர்களின் உரிமையை பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதி
மாணவர்களின் கல்விகற்கும் உரிமையைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்திருப்பதுடன், சகலரும் கல்வி கற்பதற்கான வசதிகளை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி கலைப்பிரிவில் முதலாவது இடத்தில் சர்வதேச பாடசாலை மாணவியொருவர் தெரிவானார். யாராவது ஒரு மாணவர் அல்லது மாணவி பரீட்சைக்குத் தோற்றித் திறமையை வெளிப்படுத்தினால் அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அண்மையில் பந்துல குணவர்த்தன எம்.பி, சர்வதேச பாடசாலையொன்றின் மாணவி உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் முதலாவது இடம் பெற்றதைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் நோக்கில் கல்வியமைச்சர் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது, கல்வியமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறு விமர்சிப்பது கவலையளிக்கிறது.
இலங்கையின் அரசியலமைப்புக்கு அமையவும், ஐ.நாவின் பிரகடனத்துக்கு அமையவும் ஒருவர் கல்வி கற்பதற்கான உரிமையை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பரீட்சையில் தோற்றுவதற்கு அடிப்படை தகைமைகள் இருந்தால் ஒரு நபர் பரீட்சைக்குத் தோற்ற முடியும். அந்த அடிப்படையிலேயே சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவர் தேசிய மட்ட பரீட்சையில் தனிப்பட்ட பரீட்சார்த்தியாகத் தோற்றிச் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளார். சர்வதேச பாடசாலை மாணவர்கள் தேசிய மட்ட பரீட்சைக்குத் தோற்றுவதும் பெறுபேறுகளின் பிரகாரம் முன்னிலை வகிப்பதும் இது முதற்தடவையல்ல.
அரசாங்கப் பாடசாலைகள் மாத்திரமன்றி ஏனைய பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்களின் கல்வி உரிமையையும் நாம் பாதுகாக்க வேண்டும். இதற்காக நாம் செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறான நிலையில் தேவையற்ற கருத்துக்களை முன்வைத்து மாணவர்களை வீணாகக் குழப்பத் தேவையில்லை என்றும் கூறினார். அதேநேரம், சர்வதேச பாடசாலைகளின் கல்வித்தரத்தை கண்காணிப்பதற்கு சுயாதீன சபையொன்றை நிறுவதற்கு உத்தேசித்துள்ளோம்.
இதற்கான உரிய அனுமதிகள் கிடைத்தவுடன் சுயாதீன சபை இயங்கத் தொடங்கும். இதனூடாக தனியார் பாடாசலைகள் மற்றும் சர்வதேச பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள், பாடசாலைகளின் வளமேம்பாடுகள், வசதிகள் உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க முடியும். சர்வதேச பாடசாலையை நிறுவும் போது கல்வி அமைச்சின் அனுமதியின் கீழ் நிறுவுவதற்கான தேவையான சட்ட ஏற்பாடுகளை தற்போது முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.
மகேஸ்வரன் பிரசாத்
from tkn