அவுஸ்திரேலியா-இந்தியா இறுதி டெஸ்ட் இன்று

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2--1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி இன்று கடைசி டெஸ்டில் களம் இறங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்ட் மற்றும் மெல்போர்னில் நடந்த டெஸ்ட்களில் இந்தியாவும், பேர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் அவுஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இந்தியா 2--1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மெல்போர்னில் கிடைத்த வெற்றியால் அதிக நம்பிக்கையை பெற்றுள்ள இந்திய அணி, கடைசி டெஸ்டிலும் சாதிக்கும் முனைப்புடன் ஆயத்தமாகியுள்ளது.

இந்திய அணி 1947-ம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவில் விளையாடி வருகிறது. ஆனால் இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. ஏன், எந்த ஒரு ஆசிய அணியும் அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை. தற்போது இந்திய அணிக்கு புதிய வரலாறு படைக்க பொன்னான வாய்ப்பு கனிந்துள்ளது. கடைசி டெஸ்டில் சமன் செய்தாலே தொடரை வசப்படுத்தி விடலாம். இது இந்திய வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது. புஜாரா (2 சதத்துடன் 328 ஓட்டங்கள்), தலைவர் விராட் கோலி (259 ஓட்டங்கள்) நல்ல நிலையில் உள்ளனர். மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்து தருவது அவசியமாகும். அப்போது தான் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் நெருக்கடியின்றி விளையாட முடியும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (20 விக்கெட்), முகமது ஷமி (14 விக்கெட்), இஷாந்த் ஷர்மா (11 விக்கெட்) வலு சேர்க்கிறார்கள்.

இந்திய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா, மனைவிக்கு குழந்தை பிறந்ததால் தாயகம் திரும்பி விட்டார். இதனால் அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும். அவுஸ்திரேலியாவில், சுழற்பந்து வீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைக்கும் ஒரே ஆடுகளம் சிட்னி தான். அதனால் காயத்தில் இருந்து ஏறக்குறைய தேறிவிட்ட அஸ்வினை 2-வது சுழற்பந்து வீச்சாளராக சேர்த்துக் கொள்ளலாமா? அல்லது சகல துறை வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு அளிக்கலாமா? என்பது குறித்து அணி நிர்வாகம் யோசிக்கிறது. அணியில் யார்-யாருக்கு இடம் கிடைக்கும் என்பது இன்று தெரிந்து விடும்.

இந்திய அணியின் எழுச்சியால் அவுஸ்திரேலிய அணி கலகலத்து போய் உள்ளது. அனுபவம் வாய்ந்த ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் இல்லாததால் அவர்களின் துடுப்பாட்ட வரிசை சற்று பலவீனமாகவே காணப்படுகிறது. ஆனாலும் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன் என்று மிரட்டக்கூடிய பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள்.

சொந்த மண்ணில் இந்தியாவிடம் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை கட்டிக்காப்பதற்காக அவுஸ்திரேலிய வீரர்கள் எல்லா வகையிலும் கடுமையாக மல்லுகட்டுவார்கள். சுழற்பந்து வீச்சாளரும், சகலதுறை வீரர் மார்னஸ் லபுஸ்சானே அழைக்கப்பட்டு இருப்பதால், மிட்செல் மார்ஷ் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. தொடர்ந்து சொதப்பும் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்சை கழற்றி விட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் குரல் கொடுத்துள்ளனர். ஆனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க அணி நிர்வாகம் விரும்புவதாக தெரிகிறது.

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை