ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரான ஜெனினில் இஸ்ரேல் இராணுவம் நேற்று (03) அதிகாலை நடத்திய பாரிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில் எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் இஸ்ரேலிய போர் விமானங்கள் வீடு ஒன்றை இலக்கு வைத்து மூன்று ஏவுகணைகளை வீசி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது குறைந்தது 10 வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வான் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் ஜெனின் அகதி முகாமை முடக்கி, ஆயுதம் ஏந்திய இராணுவ புல்டோசர்களின் உதவியோடு சுற்றிவளைப்புத் தேடுதலை நடத்தியுள்ளது.
இதன்போது அல் அக்ஸா தியாகப் படை தளபதிகளில் ஒருவரான சகரியா எஸ்செபிதியின் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டை இஸ்ரேலிய இராணுவம் முற்றுகையிட்டுள்ளது.
இதன்போது இஸ்ரேலிய போர் விமானங்கள் கணிசமான நேரம் அந்த முகாமில் வான் தாக்குதல்களை நடத்தியதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
பிறிதொரு சம்பவத்தில் மேற்குக் கரை நகரான ரமல்லாவுக்கு அருகில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் 21 வயது பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மேற்குக் கரையில் வன்முறை அதிகரித்திருக்கும் சூழலிலேயே நேற்றைய தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஜெனின் அகதி முகாமில் அண்மையில் 2006 ஆம் ஆண்டுக்கு பின் இஸ்ரேல் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியதோடு இந்த முகாமில் இஸ்ரேலின் சுற்றுவளைப்பு தேடுதல்கள் அதிரித்து, பலஸ்தீன கிராமங்கள் மீதான இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
from tkn