மேற்கு கென்யாவில் கடந்த வெள்ளிக்கிழமை (30) இரவு இடம்பெற்ற பயங்கர வீதி விபத்து ஒன்றில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
பரபரப்பான வீதி சந்தி ஒன்றில் கொள்கலனை ஏற்றிய ட்ரக் வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் உள்ள மற்ற வாகனங்கள் மற்றும் மக்கள் மீது மோதியுள்ளது.
“இந்த விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் மருத்துவமனையில் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது” என்று உள்ளூர் பொலிஸ் தலைவர் ஜெப்ரி மயெக் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் பற்றி கண்டறிவதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து அமைச்சர் கிப்சும்பா முர்கொமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கெரிசோ மற்றும் நகுரு நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் ஏற்பட்டிருக்கும் இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தினால் பல வாகனங்களும் சிதைந்திருப்பது அங்கிருந்து பிடிக்கப்பட்ட வீடியோக்களில் பதிவாகியுள்ளது. வீதியில் உடைந்து கிடந்த பஸ் வண்டியின் மீது மோதுவதை ட்ரக் வண்டி ஓட்டுநர் தவிர்க்க முயன்றபோதே இந்த விபத்து நேர்ந்ததாக பார்த்தவர் ஒருவர் கென்ய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து அண்மைய ஆண்டுகளில் கென்யாவில் இடம்பெற்ற மிக மோசமான வீதி விபத்தாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு, பஸ் வண்டி ஒன்று பாலத்தில் இருந்து ஆற்றுப் பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்தனர்.
from tkn