- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு; 5 மாணவர்கள்
திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை அனர்த்தத்தில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 4 பாடசாலை மாணவர்கள் உள்ளடங்களாக 6 பேர் உயிரிழந்திருந்ததோடு, 18 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 12 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தனர்.
மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் மேலுமொரு சிறுமி திருகோணமலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த முஹம்மது றபீஸ் பாத்திமா நிபா எனும் 6 வயதுச் சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (27) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமியின் உடல் திருகோணமலை தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரது உடல் இன்றையதினம் (28) பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
மேலும் உயிரிழந்த சிறுமியின் தாயாரும் இவ்வனர்த்தத்தில் மீட்கப்பட்டு கிண்ணியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய இப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 07 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
from tkn