ஐரோப்பாவில் கொவிட்-19 தீவிரம்

ஜெர்மனியில் கொரோனா தொற்று பரவல் நிலவரம் வேதனையளிப்பதாகப் பிரதமர் கூறியுள்ளார். தடுப்பு மருந்துகளின் பலன் குறித்து சந்தேகப்படுவோர் அந்த மனப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பூஸ்டர் கூடுதல் தடுப்பு மருந்துகளின் விநியோகத்தை விரைவுபடுத்துமாறு அவர் வலியுறுத்தினார்.

ஜெர்மனியில் கடந்த புதன்கிழமை புதிதாக 52,000க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 294 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஒவ்வொருவரும் தம்மையும் மற்றவர்களையும் பாதுகாப்பதாக பிரதமர் கூறினார்.

நான்காம் கட்ட வைரஸ் முழு வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறிய அவர், போதுமான அளவு மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதே வைரஸ் பரவலில் இருந்து மீள்வதற்கான வழி என்றார். ஐரோப்பாவில் கொரோனா தொற்று சம்பவங்கள் தீவிரமாக அதிகரித்து வருவதோடு அதனை கட்டுப்படுத்துவதில் பல நாடுகளும் போராடி வருகின்றன.

பொதுமுடக்கத்தை தவிர்க்க பெல்ஜியத்தில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

“கொரோனா குறித்து வரும் எச்சரிக்கை சமிக்ஞைகள் தீவிரமாக உள்ளன” என அந்நாட்டின் பிரதமர் அலெக்ஸாண்டர் டெ க்ரூ தெரிவித்துள்ளார். மேலும் அந்நாட்டில் மக்கள் புதிய சந்திப்புகளை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும் என்றிருந்த நிலையில் தற்போது 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையிலிருந்து ஒரு மாத காலத்திற்கு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயமாக்கப்படுகிறது. சினிமா, அருங்காட்சியகம் போன்ற இடங்களில் கொவிட் பாதுகாப்பு டிக்கெட் என்ற அனுமதி சீட்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பெல்ஜியம் மக்கள் அனைவருக்கும் மூன்றாவது பூஸ்டர் தடுப்பு மருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரியாவில் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளாத சுமார் 20 இலட்சம் மக்கள் வெளியில் வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு தினசரி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நெதர்லாந்தில் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அங்கு ஏற்கனவே பகுதியளவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனில் கச்சேரிகள் போன்று 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் உள் அரங்கு நிகழ்ச்சிகளுக்கு முதன்முறையாக கொவிட் தடுப்பு மருந்து சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து இது அமலுக்கு வரும். மேலும் அங்கு தடுப்பு மருந்து எடுத்து கொள்ளாதவர்கள் நிச்சயம் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டின் சமூக விவகாரங்கள் துறை அமைச்சர் லெனா ஹலென்க்ரேன் தெரிவித்துள்ளார்.

செக் குடியரசின் பிரதமர் ஆண்ட்ரேஜ் பாபிஸ், தடுப்பு மருந்து எடுத்து கொள்ளாதவர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்த ஆதாரத்தை வழங்க வேண்டும் இல்லையேல் பொது இடங்கள் மற்றும் சேவைகளுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை முதல் கொரோனா நெகடிவ் என்ற சான்றிதழ் மட்டுமே போதாது என அவர் தெரிவித்துள்ளார்.

Fri, 11/19/2021 - 12:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை