ஆப்கானிலிருந்து வெளியேறும் காலக்கெடு நெருங்குவதால் அமெரிக்காவுக்கு நெருக்கடி

வெளியேற்றப் பணிகளை நீடிப்பதற்கு முயற்சி

தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்பதற்கான காலக்கெடு நெருங்குவதால் அமெரிக்காவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தலிபான்களுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா ஓகஸ்ட் 31 க்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மக்களை மீட்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்று கோரியுள்ளன.

முற்றிலுமாக வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஜனாதிபதி ஜோ பைடன் முடிவெடுப்பார் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவை நீடிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் உடன்பாட்டை மீறுவதாக அமையும் என தலிபான்கள் கூறுகின்றனர். காலக்கெடுவுக்குப் பின்னரும் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்தால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் அதிகமானோர் காபூல் விமான நிலையத்துக்கு வெளியிலும் பிற பகுதிகளிலும் காத்திருக்கின்றனர். விமான நிலையம் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதைச் சுற்றியுள்ள பாதைகள் தலிபான்களின் வசம் உள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள், வெளிநாட்டினர் மற்றும் ஆப்கானிஸ்தானியர் உள்ளிட்டோர் விமான நிலையத்தின் வாயில்களில் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.

நெரிசல் அதிகமாக இருப்பதால், உரிய ஆவணங்களும் அனுமதியும் இருப்பவர்கள் கூட உள்ளே கடந்து செல்ல முடிவதில்லை. அதிகமானோர் உணவோடு பல நாட்களாக விமான நிலைய வாயில்களில் காத்திருக்கிறார்கள்.

கடந்த வாரத்தில் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் நெரிசலில் குறைந்தது 20 பேர் இறந்திருக்கிறார்கள். திங்கட்கிழமையன்று 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். ஆனால் காலம் குறைவாகவே உள்ளது. கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தலிபான்கள் ஓகஸ்ட் மாத இறுதிக்குப் பின்னர் வெளிநாட்டுப் படைகள் தங்கியிருந்தால் அது விதிமீறலாக கருதப்படும் என்று கூறியுள்ளனர். ஆனால் ஜனாதிபதி பைடன் இந்தக் காலக்கெடுவை எப்படியாவது நீடித்துவிடுவார் என்று பலர் நம்புகிறார்கள். காபூலைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் தலிபான்களுக்கு அஞ்சி மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களில் சிலர், தாங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழியே இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஆதரிக்கும் லட்சக்கணக்கான மக்களும் உள்ளனர். வன்முறைகளை தலிபான்களால்தான் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

தலிபான்கள் அரசு அமைப்பது குறித்து விவாதித்து வருகின்றனர். சந்தைகள் மற்றும் அலுவலகங்களும் படிப்படியாகத் திறக்கப்படுகின்றன. ஆனால் வங்கிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. பெண்களின் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.

இப்போது நாட்டை விட்டு தப்பிச் செல்ல விரும்புவோரில் பெரும்பாலானவர்கள், வெளிநாட்டுப் படைகளில் பணிபுரிந்தவர்களும், அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும்தான். 1996 முதல் 2001 வரை நடந்த ஆட்சியில் நடந்ததைப் போன்று பழிவாங்கும் நடவடிக்கைகளில் தலிபான்கள் ஈடுபடலாம் என இவர்கள் அஞ்சுகிறார்கள்.

“ஓகஸ்ட் 31 காலக்கெடு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். மீட்புப் பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் தேவை” என்று பிரான்சின் வெளியுறவு அமைச்சர் லே ட்ரியன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

காலக்கெடுவுக்குப் பிறகும் காபூல் விமான நிலையத்தை மீட்புப் பணிகளுக்காகத் திறந்த வைப்பது குறித்து நேட்டோ கூட்டாளிகள் மற்றும் தலிபான்களுடன் பேச்சு நடத்தி வருவதாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் கூறுகிறார்.

நேற்று செவ்வாயன்று நடந்த ஜி-7 மெய்நிகர் உச்சிமாநாட்டின்போது கால நீடிப்பு குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார். “அமெரிக்கா தனது படைகளை விலக்கும் காலக்கெடுவை நீடிப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்பது குறித்து போரிஸ் ஜோன்சன் பேசுவார்” என்று பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் கூறினார். அமெரிக்க இராணுவத்தின் உதவி இல்லாமல் வேறு எந்த நாட்டு இராணுவத்தாலும் காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியைத் தொடர முடியாது என்று பிரிட்டன் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் காலக்கெடு குறித்து இன்றைக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று இராணுவ ஆலோசகர்கள் வெள்ளை மாளிகையை அறிவுறுத்தியுள்ளனர்.

திரும்பப் பெறுவது குறித்து பைடன் உடனடியாக முடிவெடுத்தால் மக்களை வெளியேற்றுவதற்கு கூடுதலாகச் சில நாட்கள் இருக்கும் என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சி.என்.என் நிறுவனத்திடம் தெரிவித்தார். தற்போது 5,800 அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.

ஓகஸ்ட் 14 ஆம் திகதி தீவிர விமானப் போக்குவரத்து ஆரம்பித்ததில் இருந்து ஏறக்குறைய 48,000 பேரை அமெரிக்கா மீட்டிருப்பதாக வெள்ளை மாளிகையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வொஷிங்டனின் டல்லஸ் விமான நிலையத்திலிருந்து வரும் காட்சிகள் ஆப்கானியர்கள் நாட்டிற்கு வருவதைக் காட்டுகிறது.

ஆப்கானில் தங்கியிருக்கும் ஆப்கானியர்களுக்கு ஒரு சமரசத் திட்டத்தை வரையறுக்க தலிபான்கள் முயற்சிக்கின்றனர். கடவுச்சீட்டு வைத்திருக்கும் மக்கள் காலக்கெடு முடிந்த பின்னரும் விமானங்கள் மூலமாக நாட்டை விட்டு வெளியேறலாம் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறுகிறார்.

“அவர்கள் நாட்டில் இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம், ஆனால் அவர்கள் செல்ல விரும்பினால், வெளியேறலாம்” என்றார் அவர்.

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் நேற்று அவசரமாகக் கூடியது. ஆப்கானிஸ்தானின் மனித உரிமை நிலவரம், மனிதநேயச் சிக்கல்கள், பெண்களின் உரிமை ஆகியவை பற்றிய கவலைகளுக்கு மத்தியில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

பெண்களின் உரிமைக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என்று தலிபான்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் ஏற்கனவே பெண்களின் உரிமைகளை மீறும் சம்பவங்கள் நடந்திருப்பதாக அங்கிருந்த வரும் செய்திகள் கூறுகின்றன. ஆப்கான் நிலவரம் குறித்து சர்வதேசக் குழு விசாரிக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

தலிபான்கள் காபுல் நகரை முற்றுகையிட்ட நாளில் இருந்து தங்களது குடிமக்களை வெளியேற்றும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. இப்போதைக்கு தலிபான்களின் பிடியில் இருந்து தப்பிப் பதுங்கியிருப்பதற்கு பன்ஞ்ஷிர் பிராந்தியம் மட்டும் உள்ளது.

Wed, 08/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை