நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எத்தகைய முறையான பராமரிப்பும் இன்றி கைவிடப்பட்ட நிலையில் இருந்த கொழும்பு புறக்கோட்டை மிதக்கும் வர்த்தகச் சந்தை தொகுதி மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று மீளத்திறக்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய மேற்படி மிதக்கும் சந்தை முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் மாலை 6.00மணிக்கு மீளத் திறக்கப்படவுள்ளது.
அதற்கிணங்க மேற்படி மிதக்கும் சந்தைத் தொகுதியும் அதனை அண்டிய பிரதேசங்களும் ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலுக்கு அமைய 35மில்லியன் ரூபா செலவில் முழுமையான புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த காலத்தில் அவரது சிந்தனையின் கீழ் மேற்படி கொழும்பு புறக்கோட்டை மிதக்கும் சந்தை தொகுதி 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இன்றைய மீள் திறப்பு நிகழ்வில் அமைச்சர்களான காமினி லொக்குகே,தினேஷ் குணவர்தன,விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, பந்துல குணவர்தன, உதய கம்மன்பில உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள். உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
from tkn