தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு சொந்தமான 477 நீர் மானிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த தெரணியகல பிரதேச சபைத் தலைவருக்கு நாளை மறுதினம் (19) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் இன்றையதினம் (17) அவிசாவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபருக்கு ஏப்ரல் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
தெரணியகல, கும்புருகம பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர் விநியோகத் திட்டத்திற்கு உரித்தான 477 நீர் மானிகள் மற்றும் நீர் திட்டத்திற்கு உரித்தான பல உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர் ஒருவரினால் கடந்த மார்ச் 30ஆம் திகதி பொலிஸ் நிலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில், குறித்த களஞ்சியத்திற்கு பொறுப்பான எழுதுவினைஞர் (Clerk), சாரதி ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்ததோடு, அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இவ்வாறு திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 98 நீர் மானிகள், தெரணியகல பிரதேச சபையின் தலைவர் வசம் இருப்பது கண்டடறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நேற்றையதினம் (16) கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
from tkn