சீனாவின் மிகப்பெரிய அரசியல் கூட்டத்தில் 'தேசப்பற்றை' உறுதிப்படுத்தும் வகையில் ஹொங்கொங்கின் தேர்தல் முறையை மாற்றியமைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங் மீதான பிடியை இறுக்கும் நடவடிக்கைகளை அமுல்படுத்தி இருக்கும் நிலையிலேயே அந்த சீர்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.
ஒருவாரம் நீடிக்கும் சீனாவின் தேசிய மக்கள் கொங்கிரஸ் கூட்டத்தின்போதே இது பற்றிய வரைவு ஒன்று பற்றி பேசப்படவுள்ளது.
இந்த கூட்டத்திற்காக ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் பீஜிங்கில் ஒன்றுகூடியுள்ளனர்.
ஹொங்கொங் விவகாரம் தவிர, மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி இலக்கு மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கு ஒப்புதல் பெறப்படவுள்ளது.
ஹொங்கொங்கில் தேர்தல் குழுவை எவ்வாறு அமைப்பது மற்றும் அந்த நகரின் சட்ட சபைக்கு புதிய அதிகாரங்களை வழங்குவது பற்றி இந்தக் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தேசிய மக்கள் கொங்கிரஸ் உப தலைவர் வங் சென் நேற்று அறிவித்தார்.
சீன ஆதரவாளர்களைக் கொண்ட தேர்தல் குழு ஹொங்கொங் சட்ட மன்றத்திற்கு பெரும்பாலான உறுப்பினர்களை பரிந்துரைக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் சட்ட மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு மேலதிகமான உறுப்பினர்கள் இந்த தேர்தல் குழுவினால் பரிந்துரைக்கப்படலாம் என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
from tkn