நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சி நிலைமை உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை , அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசங்களில் தொடர்ச்சியான மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில்
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள முள்ளிப்பொத்தானை பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, வடிகான்களிலும் நீர் நிரம்பி வழிந்தூம் காணப்படுகின்றன.
தம்பலகாமம் பிரதேச சபைக்கு உட்பட்ட முள்ளிப்பொத்தானை வடக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள ஹிஜ்ரா நகர் முதலாம் இரண்டாம் குறுக்கு ஜாமியா நகர், புஹாரிநகர் பாடசாலை, ஹமீதியா நகர், முஹம்மதியா நகர் , சதாம் நகர், தங்க நகர் போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை கிராம மக்கள், குறிப்பாக நளாந்த கூலித்தொழிலாளர்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளாதாகவும் கிண்ணியா திருகோணமலை கடற்கரையோரங்களில் கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.
இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கும் செல்ல வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(முள்ளிப்பொத்தானை குறூப் நிருபர் - எம்.எஸ். அப்துல் ஹலீம்)
கொரோனா முடக்கத்திலிருந்து மழை வெள்ளத்தில் மக்கள்
கொரோனாவின் பிடியிலிருந்து சற்று விடுபட்டுவரும் நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வருகின்றது.
நேற்று மாலை ஆரம்பித்த மழை வீழ்ச்சி இன்று அதிகாலை முதல் பலத்த மழையாக மாறி தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
கொரோனா அச்சுறுத்தல் நிலையில் இருந்து அம்பாரை மாவட்ட மக்கள் சற்று விடுபட்டு நிம்மதி பெருமூச்சுவிட்ட நிலையில் தமது தொழில்களை ஆரம்பிக்க ஆயத்தமாகினர். இந்நிலையில் பலத்த மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் மக்களது அன்றாட இயல்பு வாழ்கை நிலை மீண்டுமொரு முறை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
நெற்பயிர்கள் குடலை பருவத்தை அடைந்த நிலையில் மழையின்றி சில பகுதிகளில் வேளாண்மை கருகும் நிலையினை அடைந்திருந்தது. இந்நிலையில் தற்போது பெய்துவரும் மழை வீழ்ச்சி பல விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ள போதிலும், மழை வீழ்ச்சி இடைவிடாது பெய்து வரும் நிலையில் நீர்நிலைகள் யாவும் நீரால் நிரம்பி சில தாழ்நில நெற் செய்கை வயல் நிலங்களும் முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
பகல் நேரத்தில் பயணிக்கும் வாகனங்களின் முன்விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டு பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது.
மேலும் பெய்து வரும் அடை மழையால் தாழ்நிலை பகுதிகளில் உள்ள பல இருப்பிடங்கள் வெள்ளத்தால் சூழும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சில அரச திணைக்களங்கள் உள்ளேயும் நீர் உட்புகுந்துள்ள சந்தர்ப்பங்கள் உள்ளபோதிலும் இதுவரையில் யாரும் இடம்பெறவில்லை என ஆலையடிவேம்பு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தாழ்நிலப்பிரதேசங்களில் வாழும் மக்களது கோரிக்கைக்கு அமைய கடலுடன் இணையும் ஆலையடிவேம்பு சின்னமுகத்தவாரம் பகுதி நீர்வடிந்தோடுவதன் பொருட்டு அகழ்ந்து விடுவதற்கான ஆலோசனையும் இடம்பெற்று வருகின்றது.
(வாச்சிக்குடா விஷேட நிருபர் - வி. சுகிர்தகுமார்)
தோப்பூரிலும் பாதிப்பு
தற்போது தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்திலுள்ள ஐந்து வீடுகளுக்குள் மழை நீர் உட்புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் தாழ்நிலப்பகுதியிலுள்ள குடியிருப்புக்கள் சிலவற்றிற்குள் மழை நீர் தேங்கி நிற்பதையும், வீதிகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்ச்சியாக இம்மழை பெய்யுமெனின் அதிகளவான குடியிருப்புக்குள் வெள்ள நீர் உட்புகும் அபாயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
(தோப்பூர் குறூப் நிருபர் - எம்.எம். நௌபீக்)
கந்தளாய் தாழ் நில பகுதிகள் வெள்ளத்தில்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, வடிகான்களிலும் நீர் நிரம்பி வழிகின்றன.
இம்மாவட்டத்தின் கந்தளாய், கிண்ணியா, மூதூர், திருகோணமலை போன்ற பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகின்றது.
சிறு வீதிகள் மற்றும் தாழ் நிலப்பகுதிகளில் மழை நீர் நிரம்பியுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் கடல் அழைகளின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு கடல் கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றன.
மீனவர்கள் யாரும் கடலுக்கும் செல்ல வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(கந்தளாய் தினகரன் நிருபர் - எப்.முபாரக்)
மட்டு. மாவட்டத்தில் 3 மணித்தியாலங்களில் 13.4 மி.மீ. மழை பதிவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் 11.30 மணிவரையான மூன்று மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13.4 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
புதிய காத்தான்குடி, நாவற்குடா, ஆரையம்பதி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை உட்பட பல இடங்களில் பாதைகளில் நீர் தேங்கியுள்ளமையால் போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
புரவி சூறாவளி அச்சம் நிலவிய காலப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளநீர் வடிந்து வந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் வயல் நிலங்களும் தற்போது நீரில் மூழ்கியுள்ளன.
(ரீ.எல். ஜவ்பர்கான் - மட்டக்களப்பு குறூப் நிருபர்)
அம்பாறை பிரதேசங்களில் நேற்று மாலை முதல் மழை
அம்பாறை மாவட்டத்தில் நேற்று(19) இரவு முதல் இன்று (20) வரை காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துவருகின்றது. இக்காலநிலை மாற்றத்தினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளன.
காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படவதால் கடல் அலைகளின் சீற்றம் பாரிய அளவில் காணப்படுகின்றன. இதனால் கடற்றொழிலாளர் கடலுக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களின் மீன்பிடி வள்ளங்கள், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் கொவிட்-19 தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சில பிரசேங்கள் முடக்கம் செய்யப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவரும் நிலையில் இக்காலநிலை மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக நெற்செய்கை வயல் பிரதேசங்களில் மழ நீர் நிம்பிக் காணப்படுகின்றது. தற்போது நெற் பயிரிலிருந்து கதிர்கள் வெளிவரும் காலமாக உள்ளதால் மழை நீர் கதிர்களுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
(அம்பாறை சுழற்சி நி ருபர் - ரி.கே. ரஹ்மதுல்லா)
from tkn