மன்னார் பதில் GS படுகொலை; நீதி கோரி நேற்று போராட்டம்

மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பைக் கடவை கிராம அலுவலரான எஸ்.விஜியேந்திரன் (வயது-55) கொலையை கண்டித்தும், படுகொலைக்கு நீதி வேண்டியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மேற்கு பிரதேச செயலக பணியாளர்கள் நேற்றுக் காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், உதவி பிரதேசச் செயலாளர், மாந்தை மேற்கு பிரதேசச் செயலக உத்தியோகத்தர்கள், மாந்தை மேற்கில் கடமையாற்றும் கிராம அலுவலகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு பட்டி அணிந்து பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

'அரச சேவைக்கு சன்மானம் ஆறடி கிடங்கா?', 'கொலையாளி யார்? விசாரணையை துரிதப்படுத்துங்கள்', அ'ரச உத்தியோகத்தரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்', உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தர் கடந்த 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் கடமை முடிந்து தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது கள்ளியடி ஆத்திமோட்டை பகுதியில் வைத்து மர்மமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்

Sat, 11/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை