சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஷேன் வொட்சன் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வு முடிவை வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த சகலதுறை வீரர் என்ற பட்டியலை எடுத்தால் அவுஸ்திரேலிய வீரர் வொட்சன் பெயர் நிச்சயம் இருக்கும். அந்நிய நாட்டுக்காரர் என மனம் ஒத்துகொள்ள முடியாத அளவுக்கு வொட்சன் இந்தியாவோடு ஒன்றிணைந்து விட்டார். காரணம் ஐபிஎல்தான். குறிப்பாக வொட்சனுக்கு சென்னை ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் உண்டு.
சென்னை அணியோடு ஒன்றியவர் வொட்சன். இந்நிலையில் கடைசி ஆட்டத்துக்கு பின்பு சி.எஸ்.கே. அணி நிர்வாகத்திடம் ஷேன் வொட்சன் தான் ஓய்வுப்பெறுவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்று அதிகாரபூர்வமாக ஓய்வை வீடியோ மூலம் அறிவித்தார் வொட்சன். அத்துடன் சி.எஸ்.கே. ரசிகர்களுக்கு வீடியோ மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அதில் ‘‘நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த 3 ஆண்டுகள் என் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான காலம்’’ என தெரிவித்துள்ளார்.
அவர் பேசிய வீடியோவை சி.எஸ்.கே. பகிர்ந்துள்ளது.
2018-ல் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப்பின் களம் இறங்கிய சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கடந்த சீசன் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ஓட்டத்தில் தோற்கும்போது கடைசி வரை போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
from tkn