A/L பரீட்சைகளின் பின்னர் தனியார் பஸ் சேவை முடக்கம்

பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் எச்சரிக்ைக

க.பொ.த. உயர்தர பரீட்சைகள் முடிந்ததும் எந்தவொரு தனியார் பஸ்களும் இயக்கப்படாதென, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

“க.பொ.த. உயர்தர பரீட்சைகள அடுத்த மாதம் 09ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. அதன் பின்னர் எந்தவொரு தனியார் பஸ்களும் இயக்கப்பட மாட்டாது. பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கொவிட் -19 வைரஸ் நெருக்கடியால் தனியார் பஸ் உரிமையாளர்கள் தொழிலை முன்னெடுக்க முடியாது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.

உரிய அதிகாரிகளிடம் எமது கோரிக்கைகளை முன்வைத்தும் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

கொரோனா நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தனியார் பஸ் தொழிலுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை. தனியார் பஸ் தொழிற்சங்கங்கள் முன்வைத்த திட்டங்களுக்கு அரசாங்கம் முறையான பதில்களையும் அளிக்காமையால் தனியார் பஸ் தொழில் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் பரவுவதற்கு முன்னர் தினமும் 21,000 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன. ஆனால், கொரோனாவின் பின்னர் 12,000 வரையான பஸ்களே இயக்கப்படுகின்றன. இந்நிலை மேலும் மோசமடையும் சூழ்நிலையே காணப்படுகிறது” எனவும் அவர் கூறினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 10/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை