அரசியல் கைதிகள் விடுதலை TNA யின் கண்துடைப்பு

நான்கரை வருட நல்லாட்சியில் செய்திருக்க வேண்டியது;

ஜனாதிபதிக்கு மாவை எழுதிய கடிதத்திற்கு விக்கி பதில்

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த விதமான பலமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் கூட்டமைப்பினர் காலத்தைக் கடத்திவிட்டு தற்போதைய தேர்தல் காலத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலைகளையே செய்து வருகின்றார்களென வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டினார்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறைப்பகுதியில் நேற்று முன்தினம் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றுகையில்,

அரசாங்க சார்புக் கட்சிகளுக்கு வாக்களிப்பதால் தமிழ் மக்களின் வருங்காலம் பிரகாசமடையாது. அரசாங்க சார்புக் கட்சிகள் எனும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதனுள் அடங்கும்.

மாறாக மேலும் மேலும் தமிழ் மக்கள் வாழ்க்கை சிங்கள ஆதிக்கத்தினுள் அமிழ்ந்துவிடும்.

கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த விதமான பலமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் காலத்தைக் கடத்திவிட்டு தற்போதைய தேர்தல் காலத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதும் கண்துடைப்பு வேலைகளையே செய்து வருகின்றார்கள்.

இவர்கள் நினைத்திருந்தால் பாராளுமன்றத்தில் இருந்து பேரம் பேசவேண்டிய நேரத்தில் பேரம் பேசி எங்கள் அரசியல் கைதிகளை  விடுவித்திருக்கலாம். அத்துடன் தற்போதும் கூட தொடர்ந்துவரும் அரசாங்கங்கள் தமிழ் அரசியற் கைதிகளைப் பணயக் கைதிகளாகவே வைத்துக் கொண்டு வருகின்றன. சிங்களப் போர்க் குற்றவாளிகளைக் கைதில் இருந்து தப்ப வைக்க, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் நடைபெறாதிருக்க, மேற்படி தமிழ் அரசியற் கைதிகளைப் பணையமாகப் பாவிக்கவே அவர்களைத் தொடர்ந்தும் சிறையில் வாட வைத்திருக்கின்றார்கள்.

ஆகவே நாம் தேர்ந் தெடுக்கப்பட்டால் சட்ட ரீதியாக கட்டமைப்புக்களை உருவாக்கி செய்யக்கூடிய எல்லா வழிமுறைகளையும் நாம் பரிசீலித்து நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதேசமயம் ஜனாதிபதியுடன் இவர்களின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவோம். முக்கியமாக தெரிவுசெய்யப்படும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐ. நா, சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், இந்திய அரசு ஆகியவற்றுடன் இது விடயத்தில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்போம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் வகையில் கடந்த 11 வருடங்களாக அவர்களின் உறவுகள் போராடிவருகின்றனர். அவர்களையும் உள்ளடக்கிப் போராட்டங்களை நிலத்திலும் புலத்திலும் விரிவுபடுத்தி போராட்ட வடிவங்களையும் விரிவுபடுத்தி செயற்படுவோம். போராடும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை அறிந்து, நிறைவேற்றக்கூடிய தேவைகளை புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்பதனை இத் தருணத்தில் நான் தமிழ் மக்களாகிய உங்களுக்குக் கூறி வைக்க விரும்புகின்றேன். நாம் ஒரு பலமான கட்சியாக பாராளுமன்றம் செல்வதற்கு நீங்கள் ஆதரவு வழங்க வேண்டும்.

மக்களின் வருங்காலத்தை செழுமையடையச் செய்யக்கூடிய ஒரேயொரு கட்சி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியே என்றும் அவர் தெரிவித்தார்.

Sat, 07/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை