இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட மேற்கிந்திய அணிக்கு அனுமதி

ஜூலை மாதத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்புடன் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட மேற்கிந்தியதீவு கிரிக்கெட் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணி இம் மாதத்தில் (ஜூன்) இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக இந்த போட்டித் தொடர் தள்ளிவைக்கப்பட்டது.

தள்ளிபோடப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி தொடரை ஜூலை மாதத்தில் நடத்துவது குறித்து இங்கிலாந்து, மேற்கிந்திய தீவு கிரிக்கெட் சபைகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவுறுத்தலின்படி கொரோனா தடுப்புக்கான உரிய மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி தொடரை நடத்தலாம் என்று இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் முடிவுக்கு வந்துள்ளன. இங்கிலாந்து - மேற்கிந்திய தீவு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிகள் சவுதம்டன் மற்றும் மான்செஸ்டரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. முதலாவது டெஸ்ட் ஜூலை 8-ம் திகதியும், 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 16ம் திகதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 24-ம் திகதியும் தொடங்குகிறது. போட்டி தொடருக்கு முன்னதாக வீரர்களை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம் என்பதால் இந்த போட்டிக்காக மேற்கிந்திய தீவு அணி வருகிற 8-ம் திகதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறது.

இங்கிலாந்து டெஸ்ட் போட்டி தொடர் குறித்து மேற்கிந்திய தீவு கிரிக்கெட் சபை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு மேற்கிந்திய தீவு கிரிக்கெட் சபை கொள்கை ரீதியாக அனுமதி அளித்துள்ளது. மேற்கிந்திய தீவு கிரிக்கெட் சபை மருத்துவம் மற்றும் கிரிக்கெட் தொடர்பான பிரதிநிதிகள், ஆலோசகர்கள், இங்கிலாந்து கிரிக்கெட் சபை மருத்துவம் மற்றும் பொது சுகாதார ஆலோசகர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

Tue, 06/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை