கல்முனை பிரதேச செயலக விடயம் ஒரு நாடகம்

கல்முனையில் ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் தான் காரணம் என கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் ஹாஜியார் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் கட்சி பிரமுகர்கள் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது தொடர்பில் தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பாக விசேட செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை (13) கல்முனையில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்,

கல்முனையில் ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தான் காரணம்.இக்கட்சிகளில் உள்ள முக்கியஸ்தர்கள் காலா காலம் இப்பகுதி மக்களிடையே இனவாதத்தை வைத்து அரசியல் செய்து வாக்கு சேகரிக்கின்றனர். இவர்கள் தேர்தல் காலங்களில் இவ்வாறான இனவாத உண்டியல்களை தூக்கி வருகின்றனர். இவ்வாறான காலங்கள் தவிர தமிழர்கள் - முஸ்லிம்கள் எவரும் சண்டை பிடிப்பதில்லை.ஒற்றுமையாகவே தற்போது வரை வாழ்ந்து வருகின்றனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் சேர்ந்து காலத்திற்கு காலம் தேர்தல் கால உண்டியலை குலுக்க ஆரம்பிப்பார்கள்.

தரவை பிள்ளையார் வீதியை முஸ்லிம்கள் அபகரிக்க போகின்றார்கள் என்று கோடீஸ்வரன் தரப்பினரும் தமிழர்கள் அபகரிக்க போகின்றார்கள் என்று ஹரீஸ் தரப்பினரும் சூடேற்றி வாக்குகளை பெற்றுக்கொள்வது வழமை.

உதாரணமாக கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க கல்முனை ஐக்கிய சதுக்கத்திற்கு வரும் வேளை இரவோடு இரவாக எம்.எஸ்.காரியப்பர் வீதி என்று வீதிக்கு பெயர் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஹென்றி மகேந்திரன் ஆட்களை திரட்டி வந்து உடைத்தெறிந்தார். அடுத்த நாள் ஹரீஸ் ஆட்களை திரட்டி நான் இருக்கும் போதே வீதிக்கு பெயர் வைக்க முடியவில்லை என்று வாக்குகளை பெற்றுள்ளார். அதேவேளை கல்முனை தமிழர்களிடமிருந்து பறிபோகப்போகிறது எனவே தமிழ் பிரதிநித்துவம் வேண்டும் என ஹென்றி மகேந்திரன் கோடீஸ்வரனுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுத்து தேர்தல் கால உண்டியல் குலுக்கி முடிக்கப்பட்டது.

இந்த தேர்தலுக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வைத்து தேசிய ரீதியில் தேர்தல் கால உண்டியல் குலுக்கப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்தப்பட்டது என பட்டாசுகள் கொளுத்தி தமிழ் மக்கள் அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்டனர்.

தமிழர்களும் முஸ்லிம்களும் கல்முனையில் விரோதத்துடன் வாழவில்லை. 1956ஆண்டு தந்தை செல்வா தலைமையில் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரக போராட்டம் செய்தவேளை கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர் என்றார்.

பாறுக் ஷிஹான்

Mon, 06/15/2020 - 09:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை