மிருசுவில் கொலை சம்பவம்; மைத்துனர்கள் மூவர் கைது

யாழ். தென்மராட்சி மிருசுவில் -மன்னன் குறிச்சிப் பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் சகோதரர்கள் எனவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும்,  பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில்  நேற்றிரவு (03) இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ராஜகோன் சிவகுமார் (40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவரது மைத்துனர்கள் மூவரே, வீடு புகுந்து உயிரிழந்தவரை வாளால் வெட்டியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரு தரப்பினர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்ற நிலையில், சகோதரர்கள் மூவரில் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தரின் பாதுகாப்பில் உள்ளனர்.

அத்தோடு, உயிரிழந்தவரின் மனைவியும் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்துமாறு சாவகச்சேரி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

(யாழ். விசேட நிருபர் -மயூரப்பிரியன்)
 

Mon, 05/04/2020 - 18:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை