அம்பாறையில் அரச, தனியார் நிறுவனங்களின் பணிகள் ஆரம்பம்

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அரச தனியார் நிறுவனங்களின் பணிகள் சுகாதார வழிகாட்டல்களுடன் ஆரம்பித்துள்ளன.

நேற்று திங்கட்கிழமை(11) காலை தனியார் அரச பேருந்துகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மட்டுமே செயற்படுவதை காண முடிந்தது. தபால் சேவைகள், பொது போக்குவரத்து, பிரதேச செயலகங்கள், மனித உரிமைகள் ஆணையகம் என்பன சேவையினை ஆரம்பித்தன. இதனை தொடர்ந்து மக்கள் தங்களது சேவையினை பெற்றுக்கொள்ள வருகை தந்திருந்தனர்.

மேலும் இராணுவத்தினர், பொலிஸார் சுகாதார நடவடிக்கை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சகல துறைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இக்கொடிய பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து உலக நாடுகளும் முயற்சித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்று அரசாங்கம் தனது கட்டுப்பாடுகளை தளர்த்தி வழமை நிலைக்கு மீளவும் திரும்பியுள்ளது.

நேற்று கடைகள் சந்தைகள் திறக்கப்பட்டு வாடிக்கையாளர் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டனர். பொது போக்குவரத்தை பொறுத்தளவில் சமூக இடைவெளியை பேணி போக்குவரத்து நடைபெற்றது.

இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் நிமித்தம் வாகன வருமான உத்தரவுப்பத்திரம் வழங்கும் நடைமுறை நாடு பூராகவும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தற்போதைய அறிவுறுத்தலின்படி, வாகன வருமான உத்தரவுப்பத்திரம் வழங்கல் செயன்முறையானது நேற்று கல்முனை பிரதேச செயலக காரியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Tue, 05/12/2020 - 10:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை