கொரோனாவை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு ந.தே.மு பாராட்டு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிறாஜ் மசூர் கடிதம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலை  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் சிறாஜ் மசூர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திறமையான தலைமைத்துவத்தின் கீழ் வைத்தியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொலிஸார், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏனையோர் சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றார்கள்.

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உலக சுகாதார நிறுவனம் மெச்சும் அளவுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளமை பாராட்டக் கூடிய ஒன்றாகும்.

அத்தோடு பல அபாயங்களுக்கு முகங்கொடுத்து  முன்னணியில் நின்று அத்தியாவசிய சுகாதாரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.

அந்த வகையில், முன்னணியில் இயங்கி வரும் சுகாதாரத் துறைப் பணியாளர்கள் மட்டுமல்லாது, பெருந்தொகையான வேறு பலரும் நம் சமூக இயக்கத்தை சீராக நடத்துவதற்கு பெரிதும் பங்களித்து வருகின்றனர்.

இந்த வைரஸானது, எல்லா மக்களையும் சமூகங்களையும் சேர்ந்த, எல்லா மதத்தவர்களையும் பிரிவினரையும் சமமாகவே தாக்கியுள்ளது. கிராமங்கள், நகரங்கள் மாவட்டங்கள், மாகாணங்கள், நாடுகள், தேசங்கள் என்ற எதையுமே இது பொருட்படுத்தவில்லை.

ஆதலால், எல்லாவற்றுக்கும் முன் இதிலிருந்து நம் நாட்டைப் பாதுகாப்பதே அதியுச்ச முன்னுரிமைக்குரிய விடயமாக மாறியுள்ளது. இவ்விடயத்தில் எந்த நடவடிக்கையை முன்னெடுத்தாலும், அது இன, மத, அடையாளங்களைக் கருத்தில் கொள்ளாத வகையில், கூட்டாகவும் ஒவ்வொரு இலங்கைப் பிரஜையையும் உள்வாங்கியதாகவுமே அமைதல் வேண்டும்.

உலகளாவிய நோய்ப் பரவலுக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு அனைத்துப் பிரஜைகளும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதை நாங்களும் மீள மீள வலியுறுத்துகிறோம். அதேவேளை, ஒவ்வொருவரினதும் சமய மற்றும் பண்பாட்டு உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்தாக அமையாது எனில், எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இவ்வுரிமைகளைப் பாதுகாப்பது அவசியமாகுமெனவும் அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஒலுவில் விசேட நிருபர்)

Wed, 04/08/2020 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை