தன்னிறைவான கிராமங்கள் என்ற திட்டமே நாட்டுக்கு ஆரோக்கியம் என்பதால் அந்தத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞரணிச் செயலாளருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
கொவிட் 19 உலக ஒழுங்கு முறையினை என்றும் இல்லாத வகையில் சீர்குலைத்துள்ளது. இதனால் நாடுகளிடையேயான பொருளாதார பரிமாற்றங்கள் ஆபத்தானவை என்ற நியதியை மக்கள் மனங்களில் தீயாக பரப்பியுள்ளது.
இதனால் பிரதான உணவுப் பொருட்களை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்த இலங்கை போன்ற நாடுகளுக்கு கொரோனா தொடர் கதையாகும் போது பாரிய அடிப்படை பிரச்சினைகளை ஏற்படுத்தவுள்ளது.
இதனை எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் உடனடியாக தன்னிறைவான கிராமங்கள் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக வேண்டும். தன்னிறைவான கிராமத்தில் விவசாயம், கால்நடைவளர்ப்பு, மீன்பிடி, கிராமியக் கைத்தொழில் உள்ளூர் வளங்களை பயன்படுத்தி சூழலுக்கு பாதிப்புக்கள் இல்லாது கிராமங்களை பசுமைப் பிரதேசங்களாக மாற்ற முடியும்.
அரசாங்கம் இத் திட்டத்தை ஊக்குவிப்பதற்கு உரிய ஆரம்ப உதவிகளை மேற்கொண்டு கிராமங்கள் இடையேயான வர்த்தக வலையமைப்பை சிறப்பாக மேற்கொள்ளும் போது எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பல சவால்களை இலகுவாக எதிர்கொள்ள முடியும் என்றார்.
வேலனை குறூப் நிருபர்
from tkn