சுயதனிமை நடைமுறைகளை மீறி லிந்துலையில் ஆறுபேர் விடுவிப்பு

பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றச்சாட்டு

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலிருந்து வருகை தந்திருந்த சாரதிகள் மற்றும் உதவியாளர்களென மொத்தம் ஆறுபேர் 14 நாட்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களை 4 நாட்களுக்குள் விடுவிப்பதற்கு நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவக்கூடிய அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலிருந்து கடந்த 31ஆம் திகதி லிந்துலை சுகாதார வைத்தியப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார் தேயிலைத் தொழிற்சாலையொன்றுக்கு சாரதிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களென 12 பேர் கனரக வாகனங்களில் வந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களை சுய தனிமைக்கு உட்படுத்துவதற்கு அக்கரப்பத்தனை பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

குறித்த 12 பேரில் அறுவர் பதுளை பகுதியைச் சேர்ந்தவர்களென்பதால் அவர்களின் வீடுகளில் அப்பிரதேச சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் சுய தனிமை ஏனையோரை லிந்துலை பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலொன்றில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதிமுதல் 14 நாட்களுக்கு தனிமையில் ஈடுபட்டு, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறுவறுக்கும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. எனினும், நான்கு நாட்கள் மாத்திரமே கடந்த நிலையில் அவர்கள் கண்காணிப்பில் இருந்து நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுயதனிமை நடைமுறையை இவர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளனர் என நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரால் உறுதிப்படுத்தல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும், நிறுவனத்துக்குரிய கனகர வாகனங்களும் (கண்டேனர்) விடுவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்பின்னர் ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்குரிய அனுமதிப் பத்திரத்தை லிந்துலை பொலிஸ் நிலையத்தில் பெற்றுக்கொண்டு அறுவரும் அப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வது கண்டிக்கத்தக்க செயலாகும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, சுகாதார பரிசோதகர் சங்கத்தின் இக்குற்றச்சாட்டு தொடர்பில் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் வினவியபோது,

“இந்த விடயத்தை விஞ்ஞான - தொழில்நுட்ப ரீதியில் அணுக வேண்டும். ஒரு நபரை சுய தனிமைக்கு உட்படுத்தும் போது அவர் தொடர்பை பேணியிருந்த நபர்களை அடிப்படையாகக்கொண்டே கால எல்லை தீர்மானிக்கப்படுகின்றது.

அவர்களை தொடர்பை பேணிய நபர்களுக்கு எவ்வித சிக்கலும் இல்லையெனில் 14 நாட்கள் என்ற கோட்பாடு பொருந்தாது என்றும், அதன் அடிப்படையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது”  என்றும் கூறினார்.

ஹட்டன் சுழற்சி நிருபர்

Mon, 04/06/2020 - 14:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை