அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2,228 பேர் மரணம்
உலக சுகாதார அமைப்புக்கு நிதியளிப்பதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் உலக சுகாதார ஸ்தாபனம் முறையான முகாமைத்துவம் செய்யவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் மிக மோசமாக பரவி இருக்கும் இக்கால கட்டத்தில் ட்ரம்ப் இவ்வாறான தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,228 பேர் மரணமடைந்துள்ளனர்.
அங்கு இது வரை 609,240 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதோடு, 26,033 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். இதில் நியூயோர்க்கில் மாத்திரம் 7,905 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொடர்பில், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக மாறிவிட்டதாகவும் அவ்வமைப்பு அமெரிக்காவை குறை கூறுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.
அத்துடன் கொரோனா வைரஸின் தீவிரத்தை அறிந்திருந்தும் அதனை மறைத்திருந்ததாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
அதற்கமைய, இவ்வருடத்தில் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கத் தீர்மானித்த நிதியுதவியை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
உலகத்தை பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் தாடர்பில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும், உலக சுகாதார அமைப்புக்கான உதவியை நிறுத்துவதற்கான தருணம் இதுவல்ல என்றும் அவர் அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் தனது அடிப்படை பொறுப்புகளை புறக்கணித்து, சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு உதவியை நிறுத்த முடிவு செய்துள்ளார்.
from tkn