ரவி கருணாநாயக்க உட்பட 10 பேருக்கு பிடியாணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உட்பட 10 பேரை கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பிடியாணை பெற்றவர்களை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்நிலையிலேயே ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க அறிவித்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க,  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், பேர்ப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் உட்பட 12 பேரே சந்தேக நபர்களாவர்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி மற்றும் மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால், கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் கோரிக்கைக்கு அமைவாக நீதிவான் ரங்க திஸாநாயக்க, இந்த 12 பேருக்கும் எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை விதித்தார். இதன்படி முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, பேர்ப்பச்சுவல் டிரசரீஸ் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், அந்த நிறுவன நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், ஜெப்ரி அலோசியஸ், ரஞ்சன் ஹலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன், அஜான் புஞ்சிஹேவா, புத்திக சரத்சந்திர, சங்கரப்பிள்ளை பத்மநாபன், இந்திக சமன் குமார மற்றும் பேர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனம் ஆகியோருக்கு எதிராகவே இந்த பயணத்தடை விதிக்கப்பட்டது.

இதே​ேவளை 12 சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து, சந்தேக நபர்களாக அவர்களை பெயரிட்டு, பிடியாணையைப் பெற்றுக்கொண்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்ட மாஅதிபர் டப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு அன்றைய தினம் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்த நிலையிலேயே அவர்களைக் கைதுசெய்வதற்கான நீதிமன்ற பிடியாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது.

Sat, 03/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை