நாட்டின் முன்னேற்றத்திற்கான பெண்களின் அர்ப்பணிப்பு மகத்தானது

கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளின் போது பெண்கள் அச்சமின்றி துணிச்சலுடன் செயற்பட்டதன் மூலம் நாட்டை பலமடையச் செய்ததாகவும் அது பாரிய அர்ப்பணிப்பெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் சர்வதேச மகளிர் தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

ஆண் மற்றும் பெண்ணின் சமமான சமூகப் பயன்பாட்டினை வலுவூட்டுவதற்கு மிகவும் பொருத்தமான சிறப்பான சந்தர்ப்பமொன்று இன்று உலகில் உருவாகியுள்ளது. தற்போது புதிய உலகில் தொழில்நுட்பம், தொடர்பாடல், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலை, கலாசாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் பெண்ணின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகக் காணப்படுகிறது.

அதேபோன்று உலகில் நிலைபேறான வாழ்க்கை இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில், பெண்கள் அளவிலாத அர்ப்பணிப்புக்கள், தியாகங்களைச் செய்து சிறந்த முன்னேற்றத்தை நோக்கிப் பயணித்துள்ளனர். அவள் இதுவரை பெற்றுக்கொண்ட வெற்றிகள் அனைத்தும் ஒட்டுமொத்த சமூகமும் பெற்றுக்கொண்ட வெற்றியாகும். ஏனெனில் பெண்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் மிகவும் முக்கியமான பங்களிப்பினை வழங்குகின்றனர்.

கடந்த காலத்தில் எமது நாடு எதிர்நோக்கிய பல்வேறுபட்ட சமூக, அரசியல் பிரச்சினைகளின்போது பெண்கள் முன்வந்து அச்சமின்றி மிகவும் துணிச்சலுடன் செயற்பட்டமையினை நாம் அவதானித்தோம். பொது சமுக நலனுக்கான அவர்களது பங்களிப்பும் அர்ப்பணிப்பும் தனிச்சிறப்பு வாய்ந்தனவாகும்.

“சுறுசுறுப்பானதொரு பெண்- அழகியதொரு உலகு” எனும் கருப்பொருளுடன் இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் நாம், மிகவும் சிறந்த சமூகமொன்றுக்குப் பெண்கள் வழங்கும் வினைத்திறன்மிக்க பங்களிப்பினைப் பாராட்டி, ஊக்குவித்து அவர்களின் முன்னோக்கிய பயணத்திற்கு உந்துசக்தியாகவும், உதவியாகவும் இருப்பதற்கு உறுதி பூணுவோம்.

 

Fri, 03/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை