காபன் பரிசோதனை அறிக்கை மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கையானது சட்ட பூர்வமாக நேற்றைய தினம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (6) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் அவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் கார்பன் பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரி தலைமையில் அமெரிக்கா, புளோரிடவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

குறித்த பரிசோதனை அறிக்கை 14நாட்களில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் சட்ட ரீதியாக கடந்த நாட்களில் கிடைக்க பெறாத நிலையில் நேற்றைய தினம் குறித்த அறிக்கையானது சட்ட ரீதியான ஆவணமாக மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு கிடக்கப் பெற்றுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். 

குறித்த அறிக்கை தொடர்பான எந்த விபரங்களையும் தன்னால் வழங்க முடியாது எனவும் அவ் அறிக்கை தொடர்பாக ஆர்வம் உள்ளவர்கள் குறித்த அறிக்கையை மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் ஊடாக பெற்று கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். 

அதே நேரத்தில் மனித புதை குழியின் அகழ்வு பணிகளை தொடர்சியாக மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பாக நீதவான் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார் . 

இதுவரை குறித்த மனித புதைகுழியில் இருந்து 335 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 318 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் குறூப், தலைமன்னார் நிருபர்கள்)

Thu, 03/07/2019 - 10:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை