தற்காலிக அபிவிருத்தியை விட நிலையான அபிவிருத்தி முக்கியம்

அபிவிருத்தி என்ற விடயத்தில் தற்காலிக அபிவிருத்தியை விட நிலையான அபிவிருத்தி என்பது தான் மிகவும் முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.  

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்  'நிலையான அபிவிருத்தி என்பது தான் மிகவும் முக்கியமானது. நிலையான அபிவிருத்தி எனும்போது நிலைத்திருக்கக் கூடிய ஆலைகள், பண்ணைகள் உருவாக்கப்பட வேண்டும்.   அந்தப் பண்ணைகளில் தொழில் வாய்ப்பற்று இருக்கும் இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்பட்டு தொழில்வாய்ப்புகள் கொடுக்க வேண்டிய சூழலை உருவாக்க வேண்டும்.  

இன்று பட்டதாரிகள் அவர்களின் தொழில்களுக்காகப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.2012ஆம் ஆண்டில் இருந்து அவர்கள் தொழில் வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.   யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்ற அடிப்படையில் விசேடமாக நோக்கி இவ்வாறான பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க வேண்டும்.  

தொழில்வாய்ப்பு இல்லாமல் இளைஞர் யுவதிகள் இருப்பதென்பது நாட்டுக்கு சுமையான விடயம். அவர்களுக்குரிய தொழில்வாய்ப்புக்களைக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு.  

எனவே, நிலையான அபிவிருத்தியை நோக்கிச் செல்ல வேண்டுமாக இருந்தால் பண்ணைகள் தொழிற்சாலைகள் அமைத்து தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)  

Wed, 03/13/2019 - 08:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை