மாலைதீவில் பேராதனை, மொரட்டுவை பல்கலைக்கழகங்களின் கிளைகள்

பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழங்களின் கிளைகளை மாலைதீவில் அமைப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக, நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டி, யஹலதென்ன முஸ்லிம் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி இறுதிநாள் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.பாடசாலை மைதானத்தில் நேற்று  (11)  நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்:

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகள் வெளிநாட்டில் அமைக்கப்படவுள்ளன.

மாலைதீவு ஜனாதிபதி அண்மையில் இலங்கை வந்திருந்தபோது, ஜனாதிபதி மற்றும்  பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பில் நான் இந்தக் கோரிக்கையை முன்வைத்தேன். இதை அவர் ஏற்றுக்  கொண்டார். இதனால் எமது கல்வித்தரம் சர்வதேச  அளவில் தரமுயர்த்தப்படும். பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக் கழங்களின் கிளைகளை மாலைதீவில் அமைக்கும் திட்டத்திற்கு, மாலைதீவில் தனியொரு தீவை ஒதுக்கித்தரவும் அவர் இணங்கியுள்ளார். அங்குள்ள மாணவர்கள் தங்களது பல்கலைக்கழக கல்வியின் முதல் இரண்டு வருடங்களை மாலைதீவு கிளையிலும்,இறுதி இரண்டு ஆண்டுகளை இங்குள்ள பல்கலைக்கழங்களிலும் கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் எமது கல்வித்தரம் சர்வதேச அளவிலான தரப்படுத்தலுக்கு மேம்படுத்தப்படும். 

உயர்கல்வி அமைச்சை பொறுப்பேற்றுள்ள நிலையில் அதில் பல மாற்றங்களை செய்வதற்கு தீர்மானித்துள்ளேன். இனிவரும் காலங்களில் தொழில்நுட்ப கல்விக்கு அதிக முக்கியத்துவமளித்து புதிய கற்கை நெறிகள்  அறிமுகப்படுத்தப்படும்.இதற்காக பல்கலைக்கழங்களில் தொழில்நுட்ப வளாகங்களை உருவாக்கி வருகிறோம்.  

உயர்தரத்தில் கற்கைநெறிகளை தெரிவு செய்தல் தொடர்பில் மாணவர், பெற்றோர்க ளுக்கு போதிய தெளிவில்லாதுள்ளது. இதனால் பல்கலைக்கழகம் சென்று தொழில் வாய்ப்பின்றி பலர் சிரமங்களை எதிர்கொள் கின்றனர். தொழில்வாய்ப்பை அடிப்படையாக வைத்தே பாடநெறிகளை தெரிவுசெய்ய வேண்டும். 

இனிவரும் காலங்களில், சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை முடிவடைந்த பின்னர், அந்தந்த வலயக் கல்வி நிலையங்கள் ஊடாக மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டி பயிற்சிகளை வழங்குமாறு மகாபொல நிதியத்துக்கு பணிப்புரை விடுக்கவுள்ளேன். இதன்மூலம் மாணவர்கள் சரியான பாடநெறிகளை தெரிவு செய்வதை இலகுபடுத்த முடியும். 

தொழில்வாய்ப்புக்கு பொருந்தாத பாடங்களை பல்கலைக்கழங்களில் குறைப்பது குறித்து சிந்தித்து வருகிறோம். கலைப்பிரிவில் புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தாது அதனை மட்டுப்படுத்தவுள்ளோம். தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு இலகுவான பாடநெறிகளையே புதிதாக அறிமுகப் படுத்தவுள்ளோம்.  இலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வித் தரத்தை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். முன்னணி பல்கலைக்கழங்களை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த புதியதொரு சட்டமூலத்தை உருவாக்கப்படும். இதற்கென பிரத்தியேகமாக ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளேன். இதற்கான முன்மொழிவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

Tue, 02/12/2019 - 09:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை