அத்தியாவசியமான திருத்தவேலை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.
இன்று (09) இரவு 9.00மணி முதல் நாளை பிற்பகல் 3.00மணிவரை கொழும்பு, கோட்டை, கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், மட்டக்குளி (கொழும்பு 01, 13, 14மற்றும் 15) ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுலிலிருக்கும்.
மேலும், இக்காலப்பகுதியில் புறக்கோட்டை பகுதியில் குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் வழங்கப்படுமெனவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை கூறியுள்ளது.
இதேவேளை, நாளை (10) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00மணி முதல் இராஜகிரிய, எதுல் கோட்டே ஆகிய இடங்களில் 24 மணிநேர நீர்வெட்டு அமுலிலிருக்கும்.
குறிப்பாக மொரகொஸ்முல்ல, இராஜகிரிய, எதுல்கோட்டே, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்த மற்றும் இராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம்வரையான பிரதான வீதியும் அதனுடன் இணைந்த வீதிகளிலும் நீர்வெட்டு அமுலிலிருக்குமெனவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.
எனவே, பாவனையாளர்கள் தங்களுக்குத் தேவையான நீரைச் சேகரித்து வைக்குமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை கேட்டுக்கொண்டுள்ளதுடன், இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்கு வருந்துவதாகவும் கூறியுள்ளது.
from tkn