கிண்ணியாவில் சட்டவிரோத மணல் அகழ்வில் கோடீஸ்வரருக்குத் தொடர்பு

கடற்படையினரை தாக்கியதன் பின்னணியிலும் இவரே செயற்பாடு

கிண்ணியா கந்தக்காடு சம்பவத்தின்போது கடற்படையினரை தாக்கிய, பின்னணியில் கோடீஸ்வரர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.  

இந்தக் கோடீஸ்வர வர்த்தகர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு இலாபத்தில் ஒரு பகுதியை வழங்கி கிராம மக்களை வைத்து சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

கந்தக்காட்டில் இடம்பெறும் மணல் வர்த்தகம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டித்தரும் ஒருதொழிலென்றும் கடந்த காலங்களில் இவ்வாறு மணல் வர்த்தகம் செய்துவந்த தரப்பினர் பொலிஸாரின் தடையை மீறி செயற்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது.  

மண் அகழ்வினால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இக்கோடீஸ்வர வர்த்தகர் பலவந்தமாக அங்குள்ள கிராம மக்களை பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  

இம்முறை கடற்படை வீரர்கள் பொலிஸார் மற்றும் அகழ்வுப் பணியாளர்களினால் இவர் செய்து வந்த வர்த்தகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யவும் முடிந்துள்ளது.  

இதற்கிணங்க கடந்த மூன்று வார காலமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 15பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் அப்பிரதேசத்தை முழுமையாகச் சுற்றிவளைத்து பெரும் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிலர் ஆயுதங்களுடன் வந்து பாதுகாப்பு அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் கிண்ணியா பிரதேசத்தின் பெருமளவு மக்களும் சம்பந்தப் பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேற்படி தாக்குதல் சம்பவத்தின் போது சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார் என சந்தேகிக்கப்படும் ஒருவரும் மரணமடைந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

இத்தாக்குதல் சம்பவத்தின் போது கடற்படை வீரர்கள் 12பேருக்கு காயமேற்பட்டு அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)    

Thu, 01/31/2019 - 10:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை