சுதந்திர தினத்திற்கு முன்னர் வலி வடக்கில் காணி விடுவிப்பு

- அமைச்சர் டக்ளஸிடம் ஜனாதிபதி ரணில் உறுதி

வலி வடக்கு மக்களின் ஒரு பகுதி காணிகள் சுதந்திர தினத்துக்கு முன் கையளிக்கப்படவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வலி வடக்கில் சுமார் 2 ஆயிரத்து 300 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள நிலையில், அதன் ஒரு பகுதி காணிகளை பாதுகாப்பு தரப்பு கையளிக்கவுள்ளது.

அண்மையில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வுக்காக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வலி வடகில் உள்ள தனியார் காணிகளை பகுதி பகுதியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர் யாழ். மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

கலந்துரையாடலின் பின்னர், உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் கள விஜயத்திலும் ஈடுபட்டனர். இவ்வாறான நிலையில், எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலையத்தில் உள்ள ஒரு பகுதி காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, வலி வடக்குப் பகுதியில் உள்ள விவசாய காணிகள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் கரிசனையுடன் செயல்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Mon, 01/30/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை