இலங்கையர் 46 பேர் கப்பலில் நாடு கடத்தல்

நேற்றுக் காலை கொழும்பை வந்தடைந்தனர்

இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற 46 சட்டவிரோத குடியேற்றக்காரர்களை,மீளவும் ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலிய கப்பலொன்று நேற்றுக் காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இலங்கையைச் சேர்ந்த 46 பேர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதியன்று சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்டனர். இதன் போது அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களே, அவுஸ்ரேலிய கப்பல் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவுஸ்திரேலிய எல்லைப் படைக் கப்பலில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குழுவொன்று, மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய எல்லைப் படையின் தெற்காசியாவுக்கான பிராந்திய பணிப்பாளர் கொமாண்டர் கிறிஸ் வோட்டர்ஸ், ஆட்கடத்தலை தடுப்பதில் இலங்கை பங்காளிகளுடனான உறவை அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர்வாக மதிப்பதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த அனைவரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார் .

Sat, 08/06/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை