2 கோடி ரூபா நகைகளும் ஒருதொகை பணமும் கொள்ளை

கொட்டாஞ்சேனையில் பட்டப்பகலில் கொள்ளையர் கைவரிசை

 

கொழும்பு கொட்டாஞ்சேனை சென். பெனடிக்ற் மாவத்தையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நேற்று பட்டப்பகலில் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியுள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு தொகை பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.நேற்று முற்பகல் மேற்படி வீட்டிற்குள் புகுந்துள்ள இனந்தெரியாத இரு நபர்கள் வீட்டிலுள்ளோரை அச்சுறுத்தி நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வீட்டிலிருந்து ஒன்றரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள தங்க நகைகளையும் 15 இலட்சம் ரூபா பணத்தையும் திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாபிள் வர்த்தகரான கோடீஸ்வரரின் வீட்டில் நேற்று முற்பகல் 8.00 மணியளவில் புகுந்துள்ள மேற்படி கொள்ளையர்கள் வீட்டில் தங்கியிருந்த யுவதியின் கைகளை பட்டித் துண்டொன்றினால் கட்டி அவரைப் பயமுறுத்தி வீட்டின் முன் ஹோலிலுள்ள கதிரையொன்றில் அமர்த்திவிட்டு அவரிடம் அச்சமயம் கையடக்கத் தொலைபேசி இல்லையென்பதை உறுதிசெய்துகொண்டுள்ளனர். அதனையடுத்து அந்த யுவதியை அவரது அறைக்கு கூட்டிச்சென்று தம்மிடம் துப்பாக்கி உள்ளதாக கூறி பயமுறுத்தி அலுமாரியிலுள்ள பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கொள்ளையர்களை கைதுசெய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 08/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை