இ.தொ.கா வை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அருகதையில்லை

மக்களுக்கு சேவை செய்வதே எமது ஒரே இலக்கு;

சுமந்திரனுக்கு செந்தில் பதிலடி

பருத்தித்துறை விசேட, யாழ். விசேட நிருபர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அருகதையில்லை. அவருக்கு அரசியல் தொலைநோக்கு இல்லையென இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி முடிவுறும் தருவாயிலுள்ள இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாகச் சுமந்திரன் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் போல் வாயில் அரசியல் பேசுபவர்கள் நாங்கள் கிடையாது. யாழ். பொது நூலகத்தை எரித்த ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து ஆட்சியை அமைக்க ஆதரவு வழங்க முடியுமென்றால் அதைவிட அரசாங்கத்திலிருந்து நாங்கள் வெளியேறியமை பெரிய விடயமாக அமையாது.

ஜீவன் தொண்டமானை மக்கள் பாராளுமன்றம் அனுப்பியது மக்களுக்கு வேலை செய்வதற்கே தவிர அரசாங்கத்திலிருந்து வேடிக்கை பார்ப்பதற்கல்ல.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் 15 வருடகாலம் இணைந்து பணியாற்றியுள்ளோம். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியுடன் 20 வருடங்கள் பணியாற்றியுள்ளோம்.

எமது கொள்கை மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதே தவிர ஆட்சியாளர்கள் யார்? என்பதைக் கருத்தில் எடுப்பதில்லை.

அந்த வகையில் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து நமது மக்களுக்குத் தொடர்ந்தும் பணியாற்ற முடியாத சூழ்நிலையில் நேரடியாகப் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம்.

சுமந்திரனுக்கு நான் பகிரங்கமாகச் சவால் விடுகிறேன். நீங்கள் உங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையை நான் மாகாணசபை அமைச்சராக இருந்து ஆற்றிய சேவையுடன் முடிந்தால் ஒப்பிட்டுப் பார்க்க வாருங்கள்.

12 வருட காலமாக 13ஆவது திருத்தச் சட்டத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள் அதனை நிறைவேற்ற முடியவில்லை.அரசியல் கைதிகள் சிறையில் வாடுகிறார்கள், அவர்களைக் கூட கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விடுவிக்க முடியவில்லை. இரவில் பிரதமரையும் ஜனாதிபதியும் சந்திக்கும் சிலரால் மக்களின் தேவைகளைப் பற்றிப் பேச முடியாமை கவலையளிக்கிறது.

நான் மாகாண சபை அமைச்சராக இருந்தபோது பதுளை மாவட்டத்தில் 150 பாடசாலைகளுக்குத் தமிழில் பெயர் வைத்தேன். 120 பாடசாலைகளுக்கு புதிய கட்டடங்களை அமைத்துக் கொடுத்தேன், 200 மேற்பட்ட வீதிகளை அமைத்துக் கொடுத்தேன்.

அதுமட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொடுத்தேன். இவ்வாறு பலதரப்பட்ட சேவைகளை மக்களுக்காகப் பெற்றுக் கொடுத்தேன்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்குச் சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லாதபோது, எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளைச் சுமந்திரனிடம் கேட்க வேண்டிய சூழ்நிலை உருவாகுமென குறிப்பிட்டுள்ளார்.

Wed, 05/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை