குறுகிய அரசியல் நலன்களுக்காகவே உத்தேச வேலைநிறுத்த ஏற்பாடுகள்

ஜனாதிபதியை சந்தித்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டாக தெரிவிப்பு

மக்களை அசௌகரியப்படுத்தும் நோக்கத்துக்கு ஒருபோதும் ஒத்துழைப்பில்லை

குறுகிய அரசியல் நலன்களுக்காக மக்களை அசௌகரியத்துக்குட்படுத்தும் நோக்கத்தில் நாளை 06ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள வேலை நிறுத்தத்துக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லையென பல அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். தமது சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (03) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

உத்தேசித்துள்ள வேலைநிறுத்தம், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக அல்ல என்றும், பல அரசியல் கட்சிகளின் நலனுக்காகவே மேற்கொள்ளப்படவுள்ளதென்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தவும், மக்களை ஒடுக்குவதும் இந்த வேலைநிறுத்தத்தின் நோக்கமாகும். அதனால் நிலைமையை சரியாகப் புரிந்து கொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வது சகல ஊழியர்களினதும் கடமை மற்றும் பொறுப்பு என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய வழிமுறைகளைக் கையாண்டு, அரசியல் பிளவுகளிலிருந்து விலகிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.வேலை நிறுத்தங்களால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துவதே இதன் பின்னணியிலுள்ள அரசியல் நோக்கமாகும். இதை உணர்ந்து, நிறுவனங்கள் வீழ்ச்சியடைய இடமளிக்கக்கூடாது.

கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற வேலைநிறுத்தத்தை பொருட்படுத்தாமல் தமது கடமைகளை ஆற்றிய தொழிலாளர்களுக்குத் தமது நன்றியை தெரிவித்த ஜனாதிபதி, தற்போதைய நிலைமையை புரிந்துகொண்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அனைத்து தொழிற்சங்கங்களையும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர்களான திலும் அமுனுகம, மொஹான் டி சில்வா, கஞ்சன விஜேசேக்கர, பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோருடன், போக்குவரத்து, மின்சாரம், துறைமுகம் மற்றும் கப்பற்துறை, வலுசக்தி அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Thu, 05/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை