தாய்வானில் கொவிட் தொற்று அதிகரிப்பால் பெரும் நெருக்கடி

தாய்வானில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுச் சம்பவங்கள் அந்நாட்டுச் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பின் மீது நெருக்குதலை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

அந்நாட்டில் கொவிட்-19 பரிசோதனைக் கருவிகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அவற்றை விநியோகிக்க வேண்டிய கட்டாயத்தில் தாய்வானிய அரசாங்கம் உள்ளது.

தாய்வானில் தினசரி வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை முதல்முறையாக 10,000ஐத் தாண்டியுள்ளது. அந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை பரிசோதனைக் கருவிகளை விநியோகிக்க ஆரம்பித்தது தாய்வான். மருந்தகங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்டன. ஒரு நபர் ஐந்து பரிசோதனைக் கருவிகளைக் கொண்ட பெட்டியை 17 டொலருக்கு வாங்கலாம். விற்பனைக்கு வைக்கப்பட்ட 50 மில்லியனுக்கும் அதிகமான பரிசோதனைக் கருவிகளை மக்கள் வேகவேகமாக வாங்குகின்றனர். இவ்வார ஆரம்பத்தில் தாய்வான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளும் நாட்களின் எண்ணிக்கையை 10இல் இருந்து 3 ஆகக் குறைத்துள்ளது. கடந்த புதன்கிழமை தொடர்புத் தடமறியும் நடைமுறையும் நிறுத்தப்பட்டுள்ளது.

வரும் வாரங்களில் வைரஸ் தொற்று உச்சத்தை எட்டும் என்று அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

தினசரி வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 100,000ஐத் தாண்டும் என்று அவர் மதிப்பிட்டுள்ளார். இருப்பினும் ஜூலை மாதம் முதல் நாட்டின் எல்லைகளை மீண்டும் திறக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

Sun, 05/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை