இலங்கை மீனவர்களுக்காக குரல் கொடுத்த சீமான்

உடனடியாக விடுவிக்க கோரிக்கை

 

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 04 இலங்கை தமிழ் மீனவர்களை உடனடியாக அரசு விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ள சீமான், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நால்வரும் படகு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாகவே தமிழ்நாட்டின் எல்லைக்குள் கரை ஒதுங்க நேரிட்டதாக  கூறியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ஈழத்தாயகத்தைச் சேர்ந்த முகமது கலீல், முகமது ரியாஸ், முகமது ரிஸ்கான், முகமது கைதர் ஆகிய 04 மீனவர்கள் கடலோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுக் கடந்த இரண்டு மாத காலத்துக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட இவர்கள், படகின் இயந்திரம் பழுதானதால் உண்ண உணவின்றி, மூன்று வேளையும் பச்சை மீனை சாப்பிட்டும், கடல் நீரைக்குடித்தும் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், 62 நாட்களுக்குப் பிறகு காற்றின் மூலம் படகு கரை ஒதுங்கியபோது சென்னை எண்ணூர் துறைமுகக் காவலர்களால் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நால்வரும் படகு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாகத் தமிழ்நாட்டின் எல்லைக்குள் கரை ஒதுங்க நேரிட்டது. ஆகவே, அவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்து இருப்பது சட்டத்துக்குப் புறம்பானதாகும்.

இரு நாட்டின் கடல் எல்லை வரையறைகளாலும், அரசு அதிகாரத்தின் அடக்கு முறைகளாலும் பாதிக்கப்படுவது இரு நிலங்களிலும் வாழும் ஏதுமறியா தமிழ் மீனவர்கள்தான் என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும்.

ஆகவே, எல்லை தாண்டியதாகக் கூறி கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் வாடும் ஈழத்தமிழ் மீனவர்கள் நால்வரையும் விடுவித்து, நாடு திரும்பச் செய்து, அவர்களது குடும்பத்தின் கண்ணீரைத் துடைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சீமான் கூறியுள்ளார்.

 

 

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Sat, 02/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை