உக்ரைனிலிருந்து அமெரிக்கர்களை உடன் வெளியேற பைடன் அழைப்பு

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை பற்றிய அச்சம் காரணமாக உக்ரைனில் இருக்கும் அனைத்து அமெரிக்க பிரஜைகளும் உடன் அங்கிருந்து வெளியேறும்படி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்புத் தொடுத்தால் அமெரிக்கர்களை மீட்பதற்கு படைகள் அனுப்பப்பட மாட்டாது என்று பைடன் வலியுறுத்தியுள்ளார்.

பிராந்தியத்தில் நிலைமை விரைவாக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்கும் திட்டம் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்தபோதும் எல்லைப் பகுதியில் அது 100,000க்கும் அதிமான துருப்புகளை குவித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யா அண்டை நாடான பெலாரஸுடன் பாரிய போர் ஒத்திகையை ஆரம்பித்திருப்பதோடு ரஷ்யா கடலில் முற்றுகையில் ஈடுபட்டிருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

தனது முன்னாள் சோவிட் அண்டை நாடான உக்ரைன் நேட்டோவில் இணையாதிருப்பதை உறுதி செய்வதற்கு கெடு ஒன்றை நிர்ணயிக்க வேண்டி இருப்பதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

இந்த பதற்றத்திற்கு மத்தியில் ஐரோப்பா கடந்த பல தசாப்தங்களில் மிகப்பெரிய பாதுகாப்பு பிரச்சினையை எதிர்கொள்வதாக பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் உடன் வெளியேறும்படி அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

‘அமெரிக்க பிரஜைகள் இப்போதே வெளியேற வேண்டும்’ என்று என்.பி.சி செய்திக்கு அளித்த பேட்டியில் பைடன் தெரிவித்துள்ளார்.

‘உலகின் மிகப் பெரிய இராணுவங்களில் ஒன்றையே இப்போது நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இது மிகவும் மாறுபட்ட நிலைமை என்பதோடு நிலைமை விரைவாக மாறிவிடும்’ என்றும் பைடன் எச்சரித்துள்ளார்.

தப்பிவரும் அமெரிக்கர்களை மீட்பதற்கு துருப்புகள் அனுப்பப்படுமா என்று கேட்டபோது, ‘இல்லை. அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருவருக்கு ஒருவர் சூடு நடத்த ஆரம்பித்தால் அது உலகப் போராக மாறிவிடும்.

நாம் இதுவரை இருந்ததை விட வித்தியாசமான உலகில் இருக்கிறோம்’ என்று பைடன் பதிலளித்தார்.

மறுபுறம் உக்ரைன் விவகாரம் தொடர்பான தற்போதைய பதற்ற நிலையை தணிப்பதற்கு உலகத் தலைவர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.

கிழக்கு உக்ரைனில் இடம்பெற்று வரும் மற்றைய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு ஒன்று எட்டப்படவில்லை என்று உக்ரைன் மற்றும் ரஷ்யா கடந்த வியாழக்கிழமை அறிவித்தன.

உக்ரைனுக்கு சொந்தமாக கிரிமாய தீபகற்பத்தை ரஷ்யா தனது ஆட்புலத்திற்குள் இணைத்து எட்டு ஆண்டுகளின் பின்னரே தற்போதைய பதற்றம் ஏற்பட்டுள்ளது. அது தொடக்கம் ரஷ்ய எல்லையை ஒட்டிய கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மற்றும் உக்ரைன் இடையே மோதல் இடம்பெற்று வருகிறது.

இதேவேளை அடுத்த வாரம் ரஷ்யா கடற்படை பயிற்சியில் ஈடுபட தயாராகிவரும் நிலையில், அந்நாடு தாங்கள் கடலை அணுகத் தடையாக இருக்கும் வகையில் முற்றுகையிட்டுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

உக்ரைனுடனான தனது எல்லையில் ரஷ்யா பெரும் படைகளைக் குவித்து வருவதால் ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு நடுவில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது உக்ரைன். அசோவ் கடல் முழுவதையும், கருங்கடலில் பெருமளவையும் தாங்கள் அணுக முடியாதபடி ரஷ்யப் படையினர் தடுத்துக் கொண்டு நிற்பதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார்.

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், ரஷ்யாவை ஒட்டி உள்ள நாடுகளில் நேட்டோ படையினர் ஏவுகணைகளைக் களமிறக்கக் கூடாது என கடந்த மாதம், மேற்கு நாடுகளிடம் வலியுறுத்தியது ரஷ்யா.

உக்ரைன் நாட்டுக்கு, தன் கூட்டாளிகளைத் தேர்வு செய்ய முழு உரிமை உண்டு என அமெரிக்கா மற்றும் நேட்டோ தரப்பு பதிலளித்தது. ஆனால், ஏவுகணைகளை களமிறக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்காவும், நேட்டோவும் கூறியுள்ளன.

Sat, 02/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை