சம்மாந்துறைக்கு விஜயம் செய்த சஜித்

வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கல்

 

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் "ஜன சுவய"  சமூக நலத்திட்டத்தின் ஊடாக, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சுமார் 3 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ ஹசனலியின் அழைப்பின் பேரில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று (15) விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம். ஹனிபா தலைமையிலான அபிவிருத்திகுழுவினரிடன் குறித்த மருத்துவ உபகரணங்களை கையளித்தார்.

கொரோனா தொற்றினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குழு மற்றும் அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் இணைந்து மேற்குறித்த திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிகழ்வின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரதாச கலப்பதி, ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி, கல்முனை தொகுதி பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ. ரஸாக், அமைப்பாளர் கயான் தர்ஷன மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Wed, 02/16/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை