- என்னை தூக்குங்கள் என கூறிய ரயன், 100 அடி ஆழ் துளை கிணற்றில் 4 நாட்களின் பின் முழு உலகையும் ஏமாற்றியவாறு விடை பெற்றான்
மொராக்கோவில் கடந்த நான்கு நாட்களாக 32 மீற்றர் ஆழ (100 அடி) கிணற்றில் நிலத்தடியில் சிக்கியிருந்த 5 வயது சிறுவன் ரயன் அவ்ரம் (Rayan Awram), நீண்ட மீட்பு முயற்சியைத் தொடர்ந்து முழு உலகையும் ஏமாற்றியவாறு உயிரிழந்துள்ளான்.
நேற்றையதினம் (05) சனிக்கிழமை சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவன் மரணமடைந்த செய்தியையே வைத்தியசாலை அறிவித்துள்ளது.
அந்த வகையில் 4 நாட்களாக ஆழ் துளை கிணற்றில் சிக்கிய ரயன் உயிரிழந்துவிட்டதாக மொராக்கோ மன்னரின் அரண்மனை உறுதி செய்துள்ளது.
மொராக்கோ மன்னர் ஆறாம் மொஹம்மட், சிறுவனின் பெற்றோர்களான கலீத் அவ்ரம் மற்றும் வசிமா கெர்ஷீஷ் ஆகியோருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து சிறுவனின் சோகமான மரணம் குறித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளதாக, அரண்மனை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வலிமிகுந்த சந்தர்ப்பத்தில் முழு உலகின் கவனத்தை ஈர்த்த ஆபத்தான பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக் குழுவினரின் அயராத முயற்சிகள், கூட்டுச் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு மொராக்கோ குழுக்கள் மற்றும் குடும்பங்களின் வலுவான ஆதரவிற்காக மன்னர் மொஹம்மத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (01) Chefchaouen அருகே உள்ள மலைப்பாங்கான பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனான ரயன் குறித்த ஆழ் துளைக் கிணற்றில் திடீரென வீழ்ந்துள்ளார்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை காணாத நிலையில், சிறிய அழு குரல் சத்தமொன்று கேட்ட இடத்தை நோக்கி பார்த்த போது அது குறித்த துளையிலிருந்து வருவதை அவதானித்த சிறுவனின் உறவினர் ஒருவர், அவரது கையடக்கத் தொலைபேசியின் ஒளியை பயன்படுத்தி அதனை உறுதிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரயனை மீட்க 24 மணி நேரமும் இரவு பகலாக மீட்புப் பணிகள் தொடர்ந்தவாறு இருந்தன.
குறித்த கிணற்றில் வீழ்ந்தவுடன் தன்னை தூக்குமாறு குறித்த சிறுவன் அழுததாக, அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாறைகள் மற்றும் நிலச்சரிவு அச்சுறுத்தல் காரணமாக மீட்பு பணி தொடர்ந்து தாமதமாகி வந்தது.
முன்னதாக, இது தொடர்பான முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியதாக மன்னர் அறிவித்திருந்தார்.
இதேவேளை ரயன் அவ்ரமை மீட்ட மீட்பாளர்களும், மருத்துவக் குழுவும் சுரங்கப்பாதையில் இருந்து வெளிவரும்போது, அதை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நேரடியாக வீடியோ காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிறுவன் மீட்புக்காகத் தோண்டப்பட்ட சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வந்த பிறகு மஞ்சள் போர்வையால் போர்த்தப்பட்டான், உடனடியாக அம்புலன்ஸ் மூலம் ஹெலிகொப்டருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதன் பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வெறும் 45 சென்டிமீட்டர்கள் (18 அங்குலம்) விட்டத்தைக் கொண்ட இந்த கிணற்றிலிருந்து ரயனை அடைவது மிக கடினமாக இருந்தது. அதை விரிபபடுத்துவது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது. எனவே அதற்கு அருகில் ஒரு பரந்த சரிவான வடிவில் தோண்டி அதற்கு அருகில் அடைந்து தோண்டி ரயனை மீட்பதே முழுப் பணியுமாக அமைந்திருந்தது.
இப்பிரதேசதம் பாறை மற்றும் மணல் பாங்கான கலவையால் மிகவும் சிக்கலான இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் பொறியாளர்கள், நில அளவையாளர்கள் என பல்வேறு தரப்பினர் பங்குபற்றியிருந்தனர்.
ஆரம்பத்தில் மீட்புக் குழுவினர் சிறுவனுக்கு ஒட்சிசன் மற்றும் தண்ணீர், அவரை கண்காணிக்க கெமரா ஆகியவற்றை கயிற்றின் ஆதாரத்துடன் கீழே அனுப்பியிருந்தனர். சிறுவன் நீரை அருந்துவது, சுவாசிப்பது உள்ளிட்ட விடயங்கள் வீடியோ காட்சிகள் மூலம் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
I believe Allah will save Rayan, all Islamic nation pray for him #أنقذوا_ريان pic.twitter.com/qOhe747KIW
— ريفـ (@_0rEv) February 4, 2022
Race tegen de klok om Rayan te redden https://t.co/h1x38S9BYV pic.twitter.com/mRLONsUpPu
— Arif News (@ArifnewsCom) February 2, 2022
சனிக்கிழமை காலை, மீட்புக் குழுவின் தலைவர் அப்தெல்ஹாடி தம்ராணி தெரிவிக்கையில், “இந்நேரத்தில் குழந்தையின் நிலை தொடர்பில் தீர்மானிக்க முடியாதுள்ளது. ஆனால் குழந்தை உயிருடன் இருப்பதாக நாம் கடவுளிடம் நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் உடல்நிலையை கண்டறிவது கடினம் என்று தம்ராணி கூறினார், ஏனெனில் கிணற்றின் கீழே இறக்கப்பட்ட கெமராவில் அவர் பக்கவாட்டில் கிடப்பதைக் காணக்கூடியதாக இருந்தது, ஆனால் நாம் அவரை உயிருடன் மீட்போம் என்று நாம் நம்புகிறோம்" என்று கூறினார்.
இதேவேளை, செவ்வாய்கிழமை மாலையில் இருந்து சிறுவனுக்கு தொடர்ந்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதை செஞ்சிலுவைச் சங்கம் உறுதி செய்திருந்தது.
மீட்புக் குழுவினர், புல்டோசர்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம் சிறுவன் சிக்கியிருக்கும் ஆழத்திற்கு அதனைச் சூழவிருந்த பிரதேசத்தை தோண்டி அகற்றிய பின்னர், சிறுவன் இருக்கும் இடத்தை நோக்கி கைகளால் கிடையாக தோண்டியே அவனை அடைந்துள்ளனர்.
இதன்போது அவர்கள் நிலச்சரிவு அபாயத்தை எதிர்கொண்டிருந்ததோடு, நேற்றையதினம் அவர்களின் வழியைத் தடுத்திருந்த ஒரு பெரிய பாறையைச் சுற்றியும் அவர்கள் அகழ வேண்டியிருந்தமையம் குறிப்பிடத்தக்கது
"என் குழந்தை உயிருடன் கிணற்றில் இருந்து வெளியேறும் என்று நான் நம்புகிறேன்," என்று ரயனின் தந்தை கடந்த வெள்ளிக்கிழமை மாலை 2M எனும் தொலைக்காட்சிக்கு அறிவித்திருந்தார். "சம்பந்தப்பட்ட அனைவருக்கும், மொராக்கோ மற்றும் ஏனைய அனைத்து இடங்களிலும் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்." என அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குறித்த கிணறை சரிசெய்து கொண்டிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை இச்செய்தியை அறிந்ததிலிருந்து முழு உலகிலுமுள்ள சமூக வலைத்தள ஆர்வலர்களும் #SaveRayan எனும் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்களது பிரார்த்தனைகளையும், ஆதரவையும் வெளியிட்டு வந்திருந்தனர்.
கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த பகுதியல் கூடி, அந்த இடத்தைச் சுற்றி முகாமிட்டு, மீட்புப் பணியாளர்களை ஊக்குவிப்பதற்காக கைதட்டி, மதப் பாடல்களைப் பாடி வந்ததோடு, பிரார்த்தனையிலும் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
from tkn