பெருந்தோட்ட ஆஸ்பத்திரிகள் குறித்து ஜீவன் கருத்து
பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள சுகாதார நிறுவனங்கள் முழுமையாக மேம்படுத்தப்படும். அதன் நிமித்தமே சுகாதார நிறுவனங்களை அரசு பொறுப்பேற்றுள்ளது. இதன்மூலம் எமது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் கூறுகையில்,
" சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுடன் அண்மையில் நாம் பேச்சு நடத்தியிருந்தோம். இதன்போது பல கோரிக்கைகளை முன்வைத்தோம். அதில் பிரதானமாக பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள சுகாதார நிறுவனங்களை அரசு பொறுப்பேற்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தோம். அந்தவகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்வைத்திருந்தார். இதற்கே நேற்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு எமது மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
ஹற்றன் சுழற்சி நிருபர்
from tkn