பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து நான்கு கோடி ரூபா மாயமானது

ஆறு வருடங்களாக நெருங்கிய உதவியாளர் கைவரிசை   

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சொந்தமான அரச வங்கிக் கணக்கொன்றிலிருந்து சுமார் 04 கோடி ரூபாவை, பிரதமருக்கு மிக நெருக்கமான ஒருவரூடாக கடந்த 06 வருடங்களில் அவ்வப்போது மோசடியாக பெறப்பட்டுள்ளமை தொடர்பில் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது.

விஷேட விசாரணை ஒன்றை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசின் நம்பகரமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் நேற்றுமுன்தினம் மாலை அது தொடர்பான அதிகாரபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

பிரதமரின் இவ் வங்கிக் கணக்கின் தானியக்க பணப் பறிமாற்று அட்டையை பயன்படுத்தி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ள பணத்தின் பெரும் பகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவருக்கு சம்பளமாக கிடைத்த பணம் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ் வங்கிக் கணக்கில் பணம் குறைந்துள்ளமை தொடர்பில் தேடிப் பார்த்த போதே இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளதுடன், மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர், முன்னாள் சபாநாயகர் ஒருவரின் மகனான மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமான, சில காலம் அவரது தனிப்பட்ட உதவியாளராக செயற்பட்டவர் எனவும் பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன.

இந் நிலையில், பணமோசடி தொடர்பிலான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து, இந் நபர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் அலுவலகம் தொடர்பில் வகித்து வந்த அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Thu, 01/27/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை