4 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்த நேரிடும்

- மின் பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவதால் நாட்டில் பாரிய மின்வெட்டு ஏற்படக்கூடும் எனவும் இதனால் நாளாந்தம் நான்கு மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு தயாராக இருக்குமாறு பொது மக்களை கேட்டுக்கொள்வதாகவும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவாடு தெரிவித்தார்.

சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு போதுமான 3000 மெற்றிக் தொன் டீசல் மாத்திரமே இலங்கை மின்சார சபையிடம் காணப்படுகின்றது. அத்துடன், 22 நாட்களுக்கு மாத்திரம் தேவையான உராய்வு  எண்ணெய், மின்சார சபையின் களஞ்சியசாலையில் உள்ளது.இதன்படி, மூன்று நாட்களின் பின்னர் இலங்கை மின்சார சபைக்கு, மின் வெட்டை நடைமுறைப்படுத்தி, மின்சார கேள்வியை குறைக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

இதனை முன்னெடுக்கவில்லை என்றால், மின்சார கட்டமைப்பின் சமநிலைமையை தொடர்ந்தும் பேண முடியாது.நீர் மின் உற்பத்தி நடவடிக்கையின் போது, விவசாயம், குடிநீர் மற்றும் சூழல் ஆகியவற்றை கருத்திற் கொண்டு, நீர் முகாமைத்துவம் செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது. அதனால் நீர் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பபட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் புதிய மின் உற்பத்தி திட்டங்களை இரத்து செய்தல் ஆகிய காரணங்களினாலும் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மின்வெட்டு நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பங்களில், மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர மாற்று மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டிற்குள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

Mon, 01/17/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை