முன்கூட்டியே தகவல் வெளியானது எவ்வாறு?

பொலிஸாரிடம் நீதிமன்றம் அறிக்கை கோரல்

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பி.போல், கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாதா கோவில் வீதி- துன்னாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றாம் வருட மாணவனான சிதம்பரநாதன் இளங்குன்றன் என்பவர், வாடகைக்கு தங்கியிருந்து கல்வி கற்று வந்த வன்னியசிங்கம் வீதி- கோண்டாவில் கிழக்கிலுள்ள வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.

சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பீட்டர் போல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா மரணமடைந்த மாணவன் சார்பில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் ஒரு புலன் விசாரணையை மேற்கொள்ளுமாறும் அவர் கோரினார்.

முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாரிடம் தகவல்களை வழங்குமாறு நீதவான் பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில் வழக்கு மீண்டும் (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பிலான தகவல்கள் பதியப்பட்டுள்ளதாகவும் தொலைபேசி இரசாயன பகுப்பாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லையெனவும் அதனை துரிதமாக பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து தொலைபேசியின் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையை பெறுவதற்கு இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அறிவிப்பதாகவும் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பிலான அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

 

Fri, 12/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை