சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

மூங்கிலாறு மக்களால் நேற்று முன்னெடுப்பு

முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் சட்டவிரோத கருக்கலைப்புக்கு முயற்சித்தபோது கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மூங்கிலாறு கிராம மக்களால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மூங்கிலாறு கிராமத்தில் நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 15ஆம் திகதி குறித்த சிறுமி காணாமல்போனதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதற்கு அமைவாக நான்கு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் பின்னர், கைவிடப்பட்ட வளவு ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

குறித்த சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அறிக்கை நேற்றையதினம் வெளியாகியிருந்தது. பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இறப்பு சம்பவித்துள்ளதோடு, இரண்டுமாதம் சிறுமி கருவுற்றும் இருந்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கருத்தரித்த பின்னர் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்புக்கு முயற்சித்து அதிக இரத்த போக்கு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரியும் சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த கோரியும் உயிரிழந்த சிறுமியின் கிராமமான மூங்கிலாறு கிராமத்தின் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் என பலரும் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மூங்கிலாறு சந்தியிலிருந்து உடையார்கட்டு மகா வித்தியாலயம் வரை பேரணியாக சென்று கறுப்பு கொடிகள் மற்றும் கறுப்பு பட்டிகளை அணிந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Tue, 12/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை