ஒமிக்ரோன் திரிபு மேலும் பல நாடுகளில் பரவல்: எல்லைக் கட்டுப்பாடுகள் தீவிரம்

உலக சுகாதார அமைப்பு புதிய அறிவுரை

ஒமிக்ரோன் கொரோனா தொற்று திரிபின் வீரியம் மற்றும் அதன் தடுப்பூசி பாதுகாப்பை தடுக்கும் திறன் பற்றிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் அமெரிக்காவுக்கான விமானப் பயணங்களில் கொவிட்–19 பரிசோதனை விதிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதோடு பல நாடுகளும் தமது எல்லை கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியுள்ளன.

பயணக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவதாக ஜப்பான் மற்றும் ஹொங்கொங் நாடுகள் அறிவித்திருப்பதோடு அச்சுறுத்தல் உள்ள நாடுகளின் பயணிகளுக்கு மலேசியா தற்காலிக தடை விதித்துள்ளது. ஏற்கனவே வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் வருவதற்கு தடை விதித்திருக்கும் ஜப்பானில் நேற்று இரண்டாவது ஒமிக்ரோன் திரிபு சம்பவம் பதிவாகியுள்ளது.

ஏனைய நாடுகளிலும் புதிய சம்பவங்கள் பதிவாக ஆரம்பித்துள்ளன. சிட்னியில் பல இடங்களுக்கு பயணித்த ஒருவருக்கு இந்த புதிய திரிபு தொற்றியிருக்கும் வாய்ப்பு உள்ளதாக அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது. தொற்றுக்குள்ளான நபர் பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருப்பதாக டென்மார்க் குறிப்பிட்டுள்ளது.

எனினும் பொதுப்படையான பயணத் தடைகள் இந்த வைரஸ் திரிபு உலகெங்கும் பரவுவதை தடுக்காது என்றும் அது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தில் பெரும் சுமையையே ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பதிலாக உடல்நிலை சரியில்லாதவர்கள், அச்சுறுத்தல் ஏற்படக்கூடியவர்கள் அல்லது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடாதவர்கள் அச்சுறுத்தல் கொண்ட பகுதிகளுக்குச் செல்வதை ஒத்திவைக்கும்படி அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக மொடர்னா மருந்து உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்த திரிபு பற்றி எச்சரிக்கும் வகையில் கருத்துக்கூறிய நிலையில் கடந்த செவ்வாயன்று நிதிச் சந்தைகள் வீழ்ச்சி கண்டதோடு நேற்று புதன்கிழமையும் முதலீட்டாளர்கள் நிச்சமற்ற சூழலையே வெளியிட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெறுவதற்கு உலகளாவிய சுகாதார அதிகாரிகள் மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளனர்.

“எமது சிறந்த தற்பாதுகாப்பாக தொடர்ந்தும் தடுப்பூசியே உள்ளது” என்று பிரிட்டன் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவிட், ஸ்கை நியூஸ் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

“அது போதுமான செயல்திறன் இன்றி இருக்கலாம் என்பது உண்மையே. அது பற்றி இன்னும் எமக்கு உறுதியாக தெரியாது. ஆனால், அது தீவிரமான நோய் நிலைக்கு எதிராக தொடர்ந்து செயல்திறன் கொண்டதாக இருக்க வாய்ப்பு உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இங்கிலாந்தில், பொதுப் போக்குவரத்து வாகனங்கள், கடைகள், வங்கிகள், முடிதிருத்தும் இடங்கள் போன்றவற்றில், மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் திரிபை கட்டுப்படுத்தும் நோக்கில், மேலும் சில கட்டுப்பாடுகளும் மீண்டும் நடப்புக்கு வந்துள்ளன. இதுவரை, பிரிட்டனில் 11 பேரிடம் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என, பிரிட்டிஷ் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

புதுவகைக் கிருமியைப்பற்றி மேல் விவரம் கிடைக்கும்வரை அதன் பரவலைத் தடுப்பதும் கட்டுப்படுத்துவதும் மிக முக்கியம் என, அது கருதுகிறது.

தடுப்பூசி பெற்றவர்களின் இரத்தத்தில் புதிய வைரஸ் திரிபை எதிர்ப்பதற்கு போதுமான உடல் எதிர்ப்புச் சக்தி இருக்கிறதா என்பதை கண்டறியும் ஆய்வுகூட சோதனை முடிவுகள் அடுத்த சில வாரங்களில் கிடைக்கப்பெறும் என்று ஐரோப்பிய மருந்துகள் நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் எமிர் குக் தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் 13 ஆம் திகதி தொடக்கம் ஐந்து முதல் 11 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பைசர் மருந்து உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் தடுப்பூசி ஒமிக்ரோனில் இருந்து கடுமையான நோய் நிலைமைக்கு எதிராக வலுவான பாதுகாப்பை அளிக்கும் என்று பயோஎன்டென் தலைமை நிறைவேற்று அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா வைரஸ் திரிபுக்கு பதில் நடவடிக்கையாக பிரிட்டன் மற்றும் அமெரிக்கா கூடுதல் தடுப்பூசி வழங்கும் பூஸ்டர் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளன.

கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் முதல் முறை கண்டுபிடிக்கப்பட்ட பல எண்ணிக்கையாக மரபணு பிறழ்வுகளைக் கொண்ட ஒமிக்ரோன் திரிபு தற்போது பல நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதில் புதிதாக சவூதி அரேபியா, நைஜீரியாவிலும் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பிரேசிலில் முதன்முறையாக இருவருக்கு ஒமிக்ரோன் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரேசிலில்தான் முதன்முறை புதுவகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் தென்னாபிரிக்காவில் ஒமிக்ரோன் வகை வைரஸ் கண்டறியப்படுவதற்கு முன்பே அது ஐரோப்பாவில் இருந்ததாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒமிக்ரோன் திரிபை பற்றித் தென்னாபிரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே, நெதர்லாந்தில் அது இருவரிடம் அடையாளம் காணப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளாதவர்.

புதிய கொரோனா திரிபுக்கு எதிராக சுமார் 56 நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உறுப்பு நாடுகள் பொதுப்படையாக கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருப்பது ஏற்றத்தாழ்வையே அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கப்ரியேசுஸ் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு வரும் விமானப் பயணிகள் அனைவரும் புறப்படுவதற்கு ஒரு நாளைக்குள் கொவிட்-19 தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் பரிசோதனை முடிவுகளை காட்டுவதற்கு புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக புறப்படுவதற்கு முன்னர் மூன்று நாட்களுக்குள் எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளை காண்பிக்க வசதி இருந்தது.

Thu, 12/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை